எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை மீறி... வாக்காளர் அட்டை- ஆதார் அட்டை இணைப்பில் தேர்தல் ஆணையம் மும்முரம்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் திருத்த சட்டம் 2021 நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைக்க ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு.. ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
எதிர்ப்பு ஏன்?
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அண்மையில் விசரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தல் விடுத்தது. ஆதார் என்பது வசிப்பிட அடையாள அட்டை; அது குடியுரிமை சான்றிதழ் அல்ல. ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடாது என்பது காங்கிரஸ் நிலைப்பாடு.
திரிபுராவில் மும்முரம்
இதனிடையே வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மகாராஷ்டிரா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் இன்று முதல் தீவிரப்படுத்தி உள்ளன. இது தொடர்பாக திரிபுரா தலைமை தேர்தல் அதிகாரி கிரன் கிட்டே கூறியதாவது: வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று ஆதார் அடையாள அட்டையை அதிகாரிகள் பெறுவர். வாக்காளர் அடையாள அட்டையுன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் அடியோடு ஒழிக்கப்படும்.
புதிய வாக்காளர் பட்டியல்
அதேநேரத்தில் வாக்காளர் பட்டியலில், வாக்காளரின் பெயருக்கு அருகில் ஆதார் எண் பகிரங்கப்படுத்தவும் மாட்டாது. வோட்டர் ஸ்லீப்பிலும் ஆதார் எண் இடம்பெறச் செய்ய மாட்டோம். அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்களைப் பெற்ற பின்னர் பிழைகள் இல்லாத புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கிரன் கிட்டே கூறினார்.
மகாராஷ்டிராவில் தீவிரம்
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரிகளும் இதேபோல் நடவடிக்கையை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் அட்டை இணைப்பு பணி தொடங்கும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி ஶ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறியதாவது: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர் பெயர் வேறு தொகுதியில் பதிவாகி இருந்தால் கண்டுபிடிக்க முடியும். அல்லது ஒரே தொகுதியில் வேறு வாக்குச் சாவடியில் இருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும். இத்தகைய குறைகளைக் களையத்தான் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கிறோம். இவ்வாறு ஶ்ரீகாந்த் தேஷ்பாண்டே கூறினார்.