சிதம்பரத்தை போலவே சிக்கிக் கொண்ட டி.கே சிவக்குமார்.. 10 நாள் காவல்.. சிறப்பு நீதிமன்றம் அதிரடி!
காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார். ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இவரை கடந்த ஒரு வாரமாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி அவ்வப்போது விசாரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீர் என்று கைது செய்தது.
ஆஜர் ஆனார்
இந்த நிலையில் இன்று டெல்லி சிறப்பு உயர் நீதிமன்றத்தில் டிகே சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அஜய் குமார் முன்னிலையில் டிகே சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் டிகே சிவக்குமார் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜர் ஆனார்.அதே சமயம் அமலாக்கத்துறை சார்பாக துணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜ் ஆஜர் ஆனார்.
என்ன வாதம்
இந்த வழக்கில் துணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜ் தனது வாதத்தில், இந்த முறைகேட்டில் டிகே சிவக்குமார் சம்பந்தப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கு குறித்து நிறைய தெரியும்.முறைகேட்டில் அவருக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. அவருக்குத்தான் பணம் முறைகேடாக எங்கிருந்து வந்தது என்று தெரியும். இதில் தனிப்பட்ட வகையில் நிறைய விஷயங்களை அவர் மறைக்கிறார்.
என்ன காவல்
அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்.அமலாக்கத்துறை விசாரணைக்கு டிகே சிவக்குமார் ஒத்துழைக்கவில்லை. கேள்விகளுக்கு டிகே சிவக்குமார் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை தெரியும். ஆகவே இவரை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
பதிலடி
இதையடுத்து டிகே சிவக்குமார் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில், டிகே சிவக்குமார் கைதுக்கு முறையான காரணம் எதுவும் கிடையாது. அவர் மீது வைக்கப்பட்டு இருக்கும் புகார்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. அப்படி இருக்கும் போது அவரை திடீர் என்று கைது செய்வது தவறானது. டிகே சிவக்குமார் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏற்கனவே ஒத்துழைத்து வந்தார்.
சரியானது இல்லை
இதுவரை 33 மணி நேரம் அவர் கேள்வி கேட்கப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்கு அழைத்தால் வருவார். அவரை ஏன் காவலில் எடுக்க கோரிக்கை வைக்கிறார்கள். அமலாக்கத்துறை கோரிக்கையை உடனடியாக நிராகரித்து டிகே சிவக்குமாருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
என்ன முடிவு
இதன் மீதான வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது.
என்ன முடிவு
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 13ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு செல்லும் முன் சிவக்குமார் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவக்குமாருக்கு தேவைப்படும் நேரங்களில் மருத்துவ உதவி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.