பாகிஸ்தான், அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்
டெல்லி: பாகிஸ்தான், அமெரிக்கா கூட மதசார்புள்ள நாடுகள் தான்.. ஆனால் இந்தியா மட்டுமே மதசார்பற்ற நாடு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
புது டெல்லியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.,)குடியரசு தின விழா முகாமில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், நம்முடைய நாட்டின் பக்கத்து நாடுகள் மத அடிப்படையிலான நாடுகளாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் மட்டுமல்ல அமெரிக்கா கூட மதசார்புள்ள நாடு தான். ஆனால், இந்தியா மட்டுமே மதச்சார்புள்ள நாடு கிடையாது. இந்தியா மதசார்பற்ற நாடு. இங்கு மதங்களின் படி பாகுபாடு காட்டுவதில்லை.
நம்முடைய சாதுக்கள், துறவிகள் உலகில் வாழும் அனைவரையும் ஒரே குடும்பமாக பார்க்கிறார்கள். அதனால் தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக திகழ்கிறது. இந்தியாவில் எல்லா மதங்களும் சமமானது. அனைத்து மதத்தினரும் இங்கு வாழலாம்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள குழந்தைகளும் தேசியவாதிகள் தான். அவர்களை வேறு விதமாக பார்க்கக் கூடாது. சில நேரங்களில், சரியான வகையில் ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். அவர்களை தவறாக வழிநடத்துபவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியா-சீன எல்லையில் சீன ராணுவத்தினரால் பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் கூறும் மக்கள் கவலைப்பட வேண்டாம். நமது படைகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர்கள் கவனித்து கொள்வார்கள். இந்தியாவை எதிர்க்க எந்த நாட்டுக்கும் துணிச்சல் இல்லை" இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்












Click it and Unblock the Notifications