பாஜக வேட்பாளரின் காரில் "இவிஎம் மெஷின்".. அசாமில் வெளியான வீடியோவால் பரபரப்பு.. காங். குமுறல்!
டெல்லி: அசாம் மாநிலத்தில் நேற்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பின் பாஜக எம்எல்ஏ ஒருவரின் காரில் வாக்கு பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. அஸாமில் 39 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் ஆணையம் மூலம் அருகில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் அசாமின் கரீம்காஞ்ச் பகுதியில் பாஜக எம்எல்ஏ மற்றும் பத்ரகாண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்னெந்து பாலின் காரில் நேற்று வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் காரின் பின்புறம் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இணையம்
கிருஷ்னெந்து பாலின் காரில் வாக்கு பதிவு எந்திரத்தை கண்டுபிடித்த பொது மக்கள் அதை வீடியோவாக வெளியிட்டு இருந்தனர்.பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில், அவரின் தொகுதியில் நடந்த வாக்கு பதிவு எந்திரமே கைப்பற்றப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் முறைகேடு நடக்கிறது .. இதை தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளவில்லை என்று இணையத்தில் மக்கள் புகார் வைக்க தொடங்கி உள்ளனர்.
வைரல்
இந்த காருக்கு அருகே ஒரு தேர்தல் ஆணைய அதிகாரி கூட இல்லாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பாதுகாவலர் கூட இல்லாமல் இப்படி வாக்குப்பதிவு எந்திரம் இடமாற்றம் செய்யப்பட்டது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. கிருஷ்னெந்து பாலின் காரில் வாக்குப்பதிவு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ப்ரியங்கா காந்தி
இது தொடர்பாக டிவிட் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் இப்படி வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு இன்றி கொண்டு செல்லப்படுகிறது. பொதுவாக இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பாஜக தலைவர்களின் காரில் கண்டுபிடிக்கப்படுகிறது. இது போன்று அடிக்கடி நடக்கிறது.
|
ஆனால்
ஆனால் இந்த விஷயங்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பலமுறை இப்படி இவிஎம் மிஷின்கள் இடமாற்றம் செய்யப்பட்டும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று பிரியங்கா காந்தி குமுறி உள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய தரப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷன்
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் ஆணையத்தின் காரை யாரோ சிலர் சேதப்படுத்தியதால் இப்படி வேறு காரில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. பாஜக வேட்பாளரின் வாகனம் என்று முதலில் தெரியாது.. பின்பு தாமதமாகத்தான் விஷயம் தெரிந்தது. தேர்தல் ஆணையத்தின் காரை சேதப்படுத்தியவர்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைய தரப்பு கூறியுள்ளது.. என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது..