உருமாறிய கொரோனா.. இன்னும் பல வகை தோன்றும்.. தடுப்பூசி போடாத மக்களே முக்கிய காரணம்.. ஷாக் தகவல்
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களின் உடல்களிலேயே உருமாறிய கொரோனா தோன்ற அதிகம் வாய்ப்புள்ளதாக அமெரிக்கத் தொற்றுநோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பே முக்கிய பிரச்சினையாக உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிலும் கொரோனா வைரஸ் அலை அலையாகவே தாக்குகிறது. ஒவ்வொரு முறையும் புதிய உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உருமாறிய கொரோனா
பொதுவாக ஒரு வைரஸ் உருமாற்றம் அடைவது இயல்பான ஒன்று தான். ஆனால் கொரோனா வைரசை பொருத்தவரை ஆல்பா, பீட்டா, டெல்டா என உருமாறிய கொரோனா மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இதை ஆய்வாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. உருமாறிய கொரோனா குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. இது பற்றி அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷாஃப்னர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

தடுப்பூசி போடாத மக்கள்
உருமாறிய கொரோனா ஏன் தோன்றுகிறது என்பது குறித்து அவர் கூறுகையில், "உலகில் பணக்கார சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் வேக்சின்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மேலும், மக்கள் மத்தியிலும் தடுப்பூசி பற்றிய தயக்கம் இருக்கிறது. உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் இவை மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

தீவிர பாதிப்பு
அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதால், அவர்களின் உடல்களிலேயே உருமாறிய கொரோனா தோன்ற அதிகம் வாய்ப்புள்ளது. அனைத்து வைரஸ்களும் தொடர்ந்து உருமாற்றம் அடையும். அதில் சில வகைகள் வைரசை பலவீனமாகும். அதேநேரம் சில வகை உருமாறிய வைரஸ்கள், டெல்டா கொரோனா வகையைப் போல மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உருமாறிய கொரோனா வகைகள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.

எப்படி உருவாகிறது
பொதுவாக வைரஸ் தன்னை தானே பிரதி எடுத்துக் கொண்டு பரவும். அப்போது தவறுதலாகப் பிரதி எடுக்கும்போது தோன்றுவது தான் உருமாறிய கொரோனா. வைரஸ் எந்தளவு வேகமாகப் பரவுகிறதோ, அந்தளவு உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. தடுப்பூசி போடாத மக்கள் மத்தியிலேயே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தடுப்பூசி பணிகள் தாமதமானால், உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளும் தோன்றிக் கொண்டே இருக்கும்.

டெல்டா கொரோனா
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா தற்போது உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா தான் வேகமாகப் பரவுகிறது. இன்னும் ஓர் ஆண்டில் அனைத்து நாட்டிலும் குறைந்தது 70% பேருக்கு வேக்சின் போட்டால் மட்டுமே இந்த வைரசை வெல்ல முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications