"தாழ்வாக பறந்து வந்த டிரோன்!" பிரதமர் பேரணி நடந்த இடத்திற்கு அருகே டிரோன் அட்டாக்.. பின்னணியில் யார்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீர் சென்ற போது வெடி விபத்து ஒன்று ஏற்பட்ட நிலையில், அது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. மேலும், காஷ்மீர் இரு இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் காரணமாக அங்கு இரு ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆளுநரே அங்கு அனைத்து நடவடிக்கையும் கவனித்து வந்தார்.
குப்பையில் வீசப்பட்ட ஹிட்லர், முசோலினி பாணியில் சிபிஎஸ்இ பாடங்களை நீக்கிய மோடி அரசு- வைகோ வார்னிங்
காஷ்மீரில் பிரதமர் மோடி
இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்குச் சென்று இருந்தார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாகக் காஷ்மீர் சென்றார். இதனஅ காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பொதுவாகவே காஷ்மீரில் அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் சூழலில், பிரதமர் வருகையையொட்டி அங்குப் பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தது.
குண்டுவெடிப்பு
ஜம்மு அருகே சம்பாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள வயல்வெளியில் பயங்கர சத்தத்துடன் எதோ ஒன்று வெடித்துச் சிதறியது. பிரதமரின் நிகழ்ச்சி தொடங்க சில மணி நேரத்திற்கு முன்பு இந்த வெடிவிபத்து நடந்ததால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
டிரோன் சத்தம்
காஷ்மீரின் பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குண்டுவெடிப்பு சத்தம் கேட்கச் சற்று நேரத்திற்கு முன்பு, அங்கு டிரோன் போன்ற சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. மேலும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்துள்ளது.
பின்னணியில் யார்
ஆளில்லா விமானம் மூலம் ஐஇடி வெடிகுண்டு போடப்பட்டதால் இந்தச் சம்பவம் நடந்து இருக்கலாம் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஜெய்ஷ்-இ-முகமது அல்லது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு இதைச் செய்திருக்கலாம். இவர்கள் தான் இந்த பேரணி நடக்கக் கூடாது என விரும்பின" என்றார்
சர்வதேச எல்லை
சர்வதேச எல்லையில் இருந்து வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் பிரதமரின் பேரணி நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு இந்திய பாதுகாப்புப் படையும் டிரோன்களை களமிறக்கி இருந்தது. லாலியனில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் இதை விபத்து அல்லது மின்னல் தாக்குதலாக இருக்கலாம் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், இப்போது அதற்கு நேர்மாறான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு சுமார் 2.5 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி காஷ்மீர் சென்று இருந்தார்.அப்போது ஜம்மு காஷ்மீரில் பனிஹால்-காசிகுண்ட் சாலை சுரங்கப்பாதை, டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ்வே என மொத்தம் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.