அம்பானி நிறுவன பொருட்களை புறக்கணிப்போம்... டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் வேண்டுகோள்..!
டெல்லி: அம்பானி நிறுவன தயாரிப்புகளை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தலைநகர் டெல்லியில் 14-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாட்டி வதைக்கும் குளிரில் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

புறக்கணிக்க அழைப்பு
புதிய விவசாய சட்டங்கள் கார்ப்பரேட்களுக்கு சாதகமாக உள்ளதாக கூறும் அவர்கள், அம்பானி நிறுவனத் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என தெரிவித்துள்ளனர். அதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்குகள், ஜியோ சிம் கார்டுகள், இணைய வசதி, ரிலையன்ஸ் பிரஷ் காய்கறி கடை, உள்ளிட்டவைகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

அரணாக நிற்போம்
மேலும், சுங்கச்சாவடிகளில் பொதுமக்கள் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வகையில் தாங்கள் அரணாக நின்று பாதுகாப்போம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தங்கள் போராட்டம் கார்ப்பரேட்களுக்கு எதிரானது என்பதை அவர் உணர்த்தியுள்ளனர்.

பாஜக அலுவலகம்
இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் டிசம்பர் 14-ம் தேதி பாஜக அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் வேதனை
விவசாயிகள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் இந்தப் போராட்டத்தை உலக நாடுகள் பலவும் கவனித்து வருகின்றன. இதனிடையே போராட்டக்களத்தை சுற்றி காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதை பார்த்தால் தங்களுக்கு ஜாலியன் வாலாபாக் நிகழ்வு தான் நினைவுக்கு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்த்ள்ளனர்.












Click it and Unblock the Notifications