இந்தியாவில் முதல்முறை.. டிரம்ப்புக்கு கொடுத்த கொரோனா காக்டெய்ல் மருந்து சக்சஸ்.. முதியவர் டிஸ்சார்ஜ்
டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது கொடுத்த "காக்டெய்ல்" மருந்து கொடுத்து ஹரியானாவைச் சேர்ந்த 84 வயது முதியவர் முழுயாக குணமடைந்துள்ளார். இந்தியாவில் இந்த மருந்து மூலம் சிகிச்சை பெற்ற முதல் கொரோனா நோயாளி இவர்தான்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மருந்தின் வெற்றி, நாடு முழுக்க மருத்துவ வல்லுநர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா என்றாலே ஸ்பெஷல்தான். அதிலும் அந்த நாட்டின் அதிபர் என்றால், வேறு லெவல். எனவேதான் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, கோக்டெய்ல் மருந்தை கொடுத்து எளிதாக குணப்படுத்தினர்.

அது என்ன காக்டெய்ல்
அது என்ன காக்டெய்ல் என்கிறீர்களா. பல சிறப்பான விஷயங்களின் கலவையைத்தான் பொதுவாக இந்த வார்த்தை சொல்லி அழைப்போம் இல்லையா. கோவிட் சிகிச்சையிலும் அப்படித்தான். Casirivimab மற்றும் Imdevimab ஆகிய இரு ஆன்டிபாடி மருந்துகளின் கலவையை கொரோனா நோயாளிக்கு ஊசி மூலம் செலுத்தி அவரை குணப்படுத்துகிறார்கள்.

செல்களில் பரவாது
லேசானது முதல் மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு இது நல்ல பலனை கொடுக்கிறது. ஊசி மூலம் இந்த மருந்தை செலுத்தும்போது, கொரோனா வைரஸ், மனித செல்களில் புகுந்து மேலும் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள பி.1.617. என்ற உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும் இது சிறப்பாக செயல்படுகிறது.

மருந்து விலை
இந்த மருந்தின் விலைதான் அதிகம். Casirivimab 600 எம்ஜி மற்றும் Imdevimab 600 எம்ஜி என ஆக மொத்தம் 1200 எம்ஜி அடங்கியது ஒரு டோஸ். இந்த ஒரு டோஸ் விலை ரூ.59,750. இதில் மல்டி டோஸ் பேக் என்று ஒரு வகை உள்ளது. இரு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கலாம். அதன் விலை, ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 500. வரிகள் உட்பட.

வினியோகம் ஆரம்பம்
கொரோனா சிகிச்சை மையங்கள், முன்னணி மருத்துவமனைகளில் இப்போது இந்த மருந்து கிடைக்கிறது. ரோச்சே இந்தியா மற்றும் சிப்லா ஆகிய மருந்து நிறுவனங்கள் இணைந்து இதை வினியோகிக்கின்றன.

சிகிச்சை சக்சஸ்
திங்கள்கிழமைதான் நமது நாட்டில் இந்த மருந்து வரத்து ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் குர்காம் மெடாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஹரியானாவைச் சேர்ந்த 84 வயதான, மகபத் சிங் என்பவருக்கு இந்த ஊசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது. அவர் நோயிலிருந்து குணமடைந்து நேற்று புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த மருந்தால், படுக்கை தட்டுப்பாடு குறையும், உயிர் பலி குறையும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ளது. வயதானவர்களுக்கும் இந்த மருந்து சிறப்பாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications