மணிப்பூரில் இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் : பிப்.27, மார்ச் 3ல் வாக்குப்பதிவு.. மார்ச் 10ல் ரிசல்ட்
மணிப்பூரில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா அறிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் நேரடி போட்டி உள்ளது. 2017ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. பாஜக 21தொகுதிகளில் மட்டுமே வென்றாலும் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.
சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினர்.
இதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உடன் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனிடையே 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா இன்று அறிவித்தார். அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் வரும் சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் . பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகளை அறிவித்து பேசிய சுஷீல் சந்திரா, பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முன்னுரிமை என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 10ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யவும் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வீடு வீடாக சென்று கூட்டமாக வாக்கு சேகரிக்கவும், பேரணிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications