நீதிமன்றம் கூறியும்.. லுக்அவுட் நோட்டீஸை வாபஸ் பெறாத சிபிஐ! அம்னெஸ்டி ஆகார் பட்டேல் அவமதிப்பு வழக்கு
டெல்லி: அம்னெஸ்டி மாஜி தலைவர் ஆகார் பட்டேல் பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற தவறியதாக கூறி சிபிஐக்கு எதிராக அவர் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா எனும் மனித உரிமைகள் அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் பட்டேல். இந்த அமைப்பில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (எப்சிஆர்ஏ) மீறி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுபற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. பெங்களூரு, டெல்லியில் சோதனைகள் நடத்தப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த அமைப்பு செயல்படாமல் உள்ளது.

லுக்அவுட் நோட்டீஸ்
இதற்கிடையே குஜராத் சூரத் பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக ஆகார் பட்டேலின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டது. சிபிஐயும் விசாரணை நடைபெறுவதால் ஆகார் பட்டேலுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா பல்கலைக்கழகங்களுக்கு ஆகார் பட்டேல் செல்ல வேண்டி இருந்தது.

விமான நிலையத்தில் நிறுத்தம்
இதையடுத்து ஆகார் பட்டேல் குஜராத் நீதிமன்றத்தை அணுகி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றார். மேலும் வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ஏப்ரல் 6ல் ஆகார் பட்டேல் அமெரிக்கா செல்ல பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது சிபிஐ சார்பில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் இருப்பதை காரணம் காட்டி குடியுரிமை அதிகாரிகள் அவரை அனுமதிக்க மறுத்தனர்.

டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து அவர் தனது விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தை நாடினார். இதையடுத்து ஆகார் பட்டேலுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீசை திரும்ப பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை பின்தொடராமல் இருந்த சிபிஐயை நீதிமன்றம் கண்டித்தது. மேலும் தவறுக்கு ஆகார் பட்டேலிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இந்நிலையில் தான் ஆகார் பட்டேல் சார்பில் சிபிஐக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு இன்று தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவில், " நீதிமன்ற உத்தரவை மீறியும் லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ வாங்காமல் உள்ளது. 24 X 7 என்ற அடிப்படையில் செயல்பட வேண்டிய சிபிஐ நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவதை என்னால் நம்ப முடியவில்லை'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications