ஜனாதிபதி தேர்தல்.. எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட கோபால கிருஷ்ண காந்தி மறுப்பு! தொடரும் குழப்பம்
டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக இப்போது ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெறத் தேவையான வாக்குகள் கிட்டதட்ட உறுதியாகி உள்ளது. மேலும், இது குறித்து மற்ற கட்சிகளிடம் பேச பாஜக குழு ஒன்றையும் அமைத்துள்ளது

ஆலோசனை
பாஜகவுக்கு போட்டி அளிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் ஆலோசனையில் இறங்கி உள்ளன. இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார். மேலும், டெல்லியில் பொது வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது

சரத் பவார்
முதலில் 81 வயதான சரத் பவார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நாட்டில் இருக்கும் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பதால் சரத் பவாரை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும்! எனவே அவர் கடும் போட்டி அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மம்தா பானர்ஜி இதை முன்மொழிந்த நிலையில், சரத் பவார் இதனை நிராகரித்தார்.

ஃபரூக் அப்துல்லா
அதைத் தொடர்ந்து சில பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது. அதில் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்களும் ஆலோசனையில் இடம் பெற்றது. காஷ்மீர் மக்களுக்குச் செய்ய வேண்டியதே இன்னும் நிறைய உள்ளதால் தன்னால் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இயலாது என்று ஃபரூக் அப்துல்லா நசுக்காகத் தவிர்த்துவிட்டார்.

கோபால் காந்தி
இந்தச் சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷம்ண காந்தியும் மறுத்துள்ளார். ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்க வேண்டும் என்றும் தன்னை விடச் சிறப்பான நபர் ஒருவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பரிசீலனை செய்யும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications