கொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.. ஹர்ஷ் வர்தன் பதிவால் சர்ச்சை
டெல்லி: கொரோனா நோயாளிகள் கருப்பு சாக்லேட் சாப்பிட்டால் அவர்களின் மன அழுத்தம் குறையும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,
கொரோனா தொற்று பரவல் தினசரி 3லட்சத்தை கடந்து இந்தியாவில் பதிவாகி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றால் பலியாகி வருகின்றனர்,
கொரோனாவினால் மக்கள் பலர் தங்களது நெருங்கிய உறவுகளை பறிகொடுத்து கடுமையான மனஅழுத்தத்தில் உள்ளனர். இன்னும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவனம்
மனஅழுத்தம்
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஒரு ட்வீட்டில், COVID-19 தொடர்பான மன அழுத்தத்திலிருந்து விடுபட 70 சதவீத கோகோ உள்ளடக்கத்துடன் சிறிய அளவிலான கருப்பு சாக்லேட்களை சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
நிச்சயம் உதவும்
அத்துடன் ஹர்ஷ் வர்தன், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் பல உணவுப் பொருட்களையும் பரிந்துரைத்திருக்கிறார். அவர் தனது பதிவில் "உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று இருந்தால் பீதி அடைய வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறுங்கள். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். COVID-19 உடன் போராட இது நிச்சயம் உங்களுக்கு நிறைய உதவும், "என்று ட்வீட் செய்துள்ளார்,
ஆதாரம் எங்கே
அந்த ட்வீட்டில் COVID-19 நோயாளிகளுக்கு உணவு பொருட்களின் பட்டியலை பரிந்துரைத்துள்ளார். அதில் இடம் பெற்றுள்ள கருப்பு சாக்லேட் குறித்த ஆலோசனை சர்ச்சையைத் தூண்டி உள்ளது. அமைச்சரிடம் பலர், உங்கள் கருத்தை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை முன்வையுங்கள் என்று ட்விட்டரில் கேட்டுள்ளனர். உயிர்வேதியியல் ஆராய்ச்சியாளரான அனந்த் பன் அமைச்சரிடம், நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் எங்கே?" என்று கேட்டுள்ளார்..
மஞ்சள் பால்
ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்த பட்டியலில் போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பெறுவதற்கு ஐந்து வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேருங்கள். மஞ்சள் பால் ஒரு நாளைக்கு ஒரு முறை பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
தானியங்கள்
மேலும், மக்கள் சிறிய இடைவெளியில் மென்மையான உணவுகளை உண்ண வேண்டும் என்றும், ராகி, ஓட்ஸ் உள்ளிட்டவற்றையும், முழு தானியங்களையும் சாப்பிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார். .
அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் போன்றவற்றையும் பரிந்துரைத்துள்ளார். அத்துடன் புரதச்சத்துக்காக கோழி, மீன், முட்டை, பன்னீர், சோயா, பயிறு வகைககள் மற்றும் விதை வகைகளையும் பரிந்துரைத்துள்ளார். முன்னதாக, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பதஞ்சலியின் கொரோனில் மாத்திரையை பரிந்துரைத்ததற்காக ஹர்ஷ் வர்தன் கடும் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.