'இசட் பிளஸ் பாதுகாப்பை அசாதுதீன் ஒவைசி ஏற்றுக்கொள்ள வேண்டும்'.. நாடாளுமன்றத்தில் அமித்ஷா வேண்டுகோள்
டெல்லி: இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அசாதுதீன் ஒவைசிக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார். சில நாட்களுக்கு முன்பு உ.பி.யில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒவைசி கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன. இதனால் அங்கு அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பாஜக, எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அசாதுதீன் ஒவைசி கார் மீது துப்பாக்கி சூடு
சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் டெல்லி திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவரது கார் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இரண்டு புல்லட்டுகள் காரை துளைத்தன. இந்த சம்பவத்தில் அசாதுதீன் ஒவைசி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்த ஒவைசி
ஒவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒவைசிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அவர் இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்
அப்போது அவர் கூறுகையில், ஓவைசியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளத. 'இசட்' பிரிவு பாதுகாப்பு (புல்லட் புரூப் உடன்) கார் வழங்க அரசு முடிவு செய்துள்ளது, ஆனால் ஒவைசி மறுத்துவிட்டார். இசட் பிளஸ் பாதுகாப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சபை உறுப்பினர்கள் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மோட்டார் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவரது வாகனத்தின் கீழ் பகுதியில் மூன்று தோட்டாக்கள் இருந்தன. இந்த சம்பவத்தை மூன்று சாட்சிகள் நேரில் பார்த்தனர். இது தொடர்பாக எஃப்ஐஆர், பதிவு செய்யப்பட்டுள்ளது.

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது
இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு கைத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, 'அசாதுதீன் ஒவைசிக்கு ஹாபூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட எந்த நிகழ்ச்சியும் இல்லை, அவரது வருகை குறித்த எந்த தகவலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு முன்பே அனுப்பப்படவில்லை. தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, அவர் டெல்லிக்கு பத்திரமாக வந்தார்' என்று கூறினார். உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications