தேர்தலில் மவுசு குறையும் நோட்டா? கடந்த 5 ஆண்டுகளில் பதிவான ஓட்டுகள் இவ்வளவு தான்
டெல்லி: சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பேர் நோட்டோவுக்கு ஓட்டளித்தனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நோட்டோ பட்டன் மீதான ஆர்வம் வாக்காளர்களிடம் குறைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களின்போது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க விருப்பம் இல்லாவிட்டால் வாக்காளர்கள் நோட்டோ எனும் பட்டனை அழுத்தி ஓட்டு செலுத்தலாம்.
இந்த நடைமுறை இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மட்டும் இடம்பெறும். உள்ளாட்சி தேர்தல் நடைமுறையில் இது பின்பற்றப்படாது.

நோட்டா அறிமுகம்
கடந்த 2013ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்தியாவில் நோட்டா பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து முதன் முதலாக கடந்த 2013ம் ஆண்டில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் நோட்டா பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது.

1.3 கோடி ஓட்டுகள் பதிவு
இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2022 வரை 5 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் நோட்டோவுக்கு எவ்வளவு பேர் ஓட்டு செலுத்தி உள்ளனர் என்பது பற்றி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை கணக்கீடு செய்தன. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மொத்தம் 1.3 கோடி பேர் நோட்டோவுக்கு ஓட்டு போட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவு
2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் மொத்தம் 65 லட்சத்து 23 ஆயிரத்து 975 பேர் நோட்டாவுக்கு ஓட்டு செலுத்தி உள்ளனர். இது தேர்தலில் பதிவான ஓட்டுக்களில் 1.06 சதவீதம் ஆகும். அதிகபட்சமாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்(தனி) தொகுதியில் 51 ஆயிரத்து 660 ஓட்டுகளும், குறைந்தபட்சமாக லட்சத்தீவு தொகுதியில் 100 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

சட்டசபை தேர்தல்களில் எவ்வளவு?
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் நோட்டோவுக்கு 64.5 லட்சம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் மட்டும் 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 ஓட்டுக்கள் நோட்டாவுக்கு கிடைத்தன. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சட்டசபை தேர்தலில் நோட்டோவுக்கு கிடைத்த அதிகபட்ச ஓட்டுக்களாக இது உள்ளது. அதேநேரத்தில் நோட்டோவுக்கு குறைந்த ஓட்டுக்கள் கிடைத்த மாநிலமாக மிசோராம் உள்ளது. இங்கு கடந்த 2018 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 2 ஆயிரத்து 917 ஓட்டுக்கள் தான் நோட்டோவுக்கு கிடைத்தது.

குறைந்து வருகிறதா நோட்டா ஆர்வம்
2020ல் பீகாாரில் நடந்த சட்டசபை தேர்தலில் நோட்டோவுக்கு 7.06 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. 2020 டெல்லி சட்டசபை தேர்தலில் 43,108 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. அதேவேளையில் சமீபத்தில் நடந்து முடிந்த கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல்களில் நோட்டா வாக்குகளில் 8.2 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகின. இது 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் பார்த்தல் மிகவும் குறைவாகும். அதாவது வெறும் 0.07 சதவீதம் பேர் மட்டுமே நோட்டோவுக்கு ஓட்டளித்துள்ளனர். மேலும் கிரிமினல் வழக்குகள் உள்ள 3 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி ரெட் அலர்ட் தொகுதிகளாக உள்ளது. 2018 முதல் நடந்த சட்டசபை தேர்தலில் ரெட் அலர்ட் தொகுதிகளில் 26.8 லட்சம் பேர் நோட்டோவுக்கு ஓட்டளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications