எல்லா பக்கமும்.. சுற்றி வளைத்த 400 மாவோயிஸ்டுகள்.. கொரில்லா தாக்குதல்.. கோப்ரா படை சரிந்தது எப்படி?
டெல்லி: சட்டீஸ்கரில் நடந்த மாபெரும் மாவோயிஸ்ட் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது எப்படி.. இந்த தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
சட்டீஸ்கரில் உள்ள பிஜப்பூர் பகுதியில் நேற்று முதல்நாள் மாலை பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து மாவோயிஸ்ட்கள் நடத்திய கொரில்லா தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். ஐஇடி வகை குண்டுகளை வைத்தும், துப்பாக்கிகள் மூலமும் மாவோயிஸ்ட் படையினர் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர்.
சனிக்கிழமை மதியம் தாக்குதல் நடந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் 5 பாதுகாப்பு படையினரின் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மீதம் உள்ள 17 பேரின் உடல் மீட்கப்பட்டது.. இந்த கொடூரமான தாக்குதல் எப்படி நடந்தது?
எப்படி
சட்டீஸ்கரில் உள்ள பிஜப்பூர் மாவட்டம் மாவோயிஸ்ட் அதிகம் இருக்கும் மாவட்டம் ஆகும். இங்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க பாதுகாப்பு படை சார்பாக நிறைய கேம்ப்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு இருக்கும் தெற்கு பஸ்கார் காட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் தங்கி இருக்கும் போது மாவோயிஸ்ட்கள் அந்த முகாமை சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர் .
எத்தனை பேர்
மொத்தம் 400 மாவோயிஸ்ட் படையினர், முகாமின் நான்கு பக்கத்தையும் சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர். ஏற்கனவே இங்கு அவர்கள் பதுக்கி வைத்து இருந்த ஐஇடி குண்டுகளையும் வெடிக்க செய்துள்ளனர். இந்த குண்டுகளை வெடிக்க செய்யும் போதே துப்பாக்கி மூலம் கொடூரமாக தாக்கி உள்ளனர். மிஷின் கன்களை பயன்படுத்தி உள்ளனர். கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் மீது வீசி உள்ளனர்.
சர்ப்ரைஸ்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்பு படையினர் .. இது ஒரு சர்ப்ரைஸ் தாக்குதல். எதிர்பார்க்காத நேரத்தில் எங்களை சுற்றி வளைத்து தாக்கினார்கள். இது தொடர்பாக உளவு தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை . எங்களுக்கு மறைய கூட இடம் இல்லை என்று கூறியுள்ளனர். இவர்கள் மரங்களுக்கு பின் மறைந்து கொண்டு கடைசி வரை பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.. துப்பாக்கி தோட்டாக்கள் தீரும் வரை தாக்கிய பாதுகாப்பு படையினர் பின் வீர மரணம் அடைந்துள்ளனர்.
படைகள்
இதில் பாதுகாப்பு படையில் பல பிரிவை சேர்ந்த வீரர்கள் இருந்துள்ளனர். கோப்ரா படை எனப்படும் காடுகளிலும் மலைகளிலும் தாக்குதல் நடத்த கூடிய சிறப்பு படை குழு வீரர்கள் இருந்துள்ளனர் . மிக சிறப்பான பயிற்சி பெற்ற இவர்களால் கூட திருப்பி தாக்க முடியாத அளவிற்கு கொடூரமாக மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தி உள்ளனர். அதேபோல் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் வீரர்கள், டிஆர்ஜி படை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தாக்குதலில் அதிகம் பலியானது கோப்ரா படை வீரர்கள்தான்.
திட்டமிடல்
மாவோயிஸ்ட் நடத்திய இந்த கொரில்லா தாக்குதல், உளவு தகவல் இல்லாமல் நடந்து இருக்காது என்றும் கூறுகிறார்கள். அதாவது பாதுகாப்பு படையினர் எங்கே இருக்கிறார்கள், எப்போது ஓய்வு எடுக்கிறார்கள், எங்கே ஓட்டை இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு கச்சிதமாக தாக்கி உள்ளனர். கொரில்லா தாக்குதல்கள் கண் மூடித்தனமாக இருக்கும். ஆனால் இந்த தாக்குதலில் முறையான திட்டமிடல் இருந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கிறார்கள்.
10 பேர்
மீட்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் உடல்களில் பல துப்பாக்கி துளைகள் இருந்துள்ளது. சிலர் கொல்லப்பட்ட பின்பும் கூட துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின் மாத்வி ஹிட்மா என்ற மாவோயிஸ்ட் மாஸ்டர்மைன்ட் இருந்திருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில்தான் இவர் இருந்ததாக உளவு தகவல்கள் கூறுகின்றன.
மோசம்
இவர்தான் தாக்குதலுக்கான திட்டங்களை வகுத்து இருப்பார் என்கிறார்கள். 400 பேரை தயார் செய்து, அவர்களிடம் பிளானை சொல்லி முறையாக இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டு உள்ளது. இதனால் கண்டிப்பாக பல நாள் வேவு பார்த்து, சில வாரங்கள் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 4 வருடங்களில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.