மனைவி அனுமதியின்றி உடலுறவு என்பது பலாத்காரமாகும்.. கருக்கலைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: மனைவியின் அனுமதியின்றி கணவர் உடலுறவு கொள்வதை பலாத்காரமாக கருதலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு விதிமுறைகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான வழக்கில் இதனை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மணிப்பூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இதில் இளம்பெண் கர்ப்பமானார். இதற்கிடையே காதலன் திருமணத்துக்கு மறுத்தார்.
இதற்கிடையே அவரது கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி கொடுக்க மறுத்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

விரிவான உத்தரவுடன் தீர்ப்பு
மேலும் இந்தியாவில் கருக்கலைப்பு விதிமுறைகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி விரிவான உத்தரவுடன் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பற்றிய விபரம் வருமாறு:

தீர்ப்பு என்ன?
அதன்படி சட்டபூர்வ மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உண்டு. கருக்கலைப்பு செய்து கொள்ள அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள். திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்ள உரிமை உண்டு. மருத்துவ கருக்கலைப்பு சட்டம் மற்றும் விதிகளின் படி 24 வாரங்கள் வரையிலான கருவை கலை திருமணமான, திருமணம் ஆகாத பெண்கள் கலைத்து கொள்ளலாம். கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம். பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது மட்டுமே தடுக்கப்பட வேண்டியது எனக்கூறி தீர்ப்பு வழங்கியது.

முக்கிய கருத்து
மேலும் இந்த தீர்ப்பின்போது பல்வேறு முக்கிய கருத்துகளை நீதிமன்றம் கூறியது. அதில் கவனிக்கத்தக்க கருத்தாக ஒன்று உள்ளது. அதன்படி திருமணம் முடிந்த பிறகும் மனைவியின் அனுமதியின்றி கணவர் உடலுறவு கொள்வதை பலாத்காரமாக கருதலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் கூறியதாவது:

விருப்பமின்றி உறவு
திருமணமான பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். மேலும் கட்டாய கருவுற்றலுக்கும் வலுக்கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும் கணவர் விருப்பத்துக்கு ஏற்ப சம்மதம் இன்றி ஒரு பெண் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அவர் கர்ப்பமாகலாம். இதனை கருத்தில் கொள்ள வேண்டும். கருவுற்றலை ஏற்று கொள்வது அல்லது கலைப்பது என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமையாகும். அதனை அவரே தேர்வு செய்ய வேண்டும்.

கட்டாய உடலுறவு பலாத்காரமாகும்
மேலும் தனது மனைவி என்பதாலே ஒரு பெண்ணுக்கு கணவரால் பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்படலாம் என்பதை உணர வேண்டும். பாலினம் அடிப்படையிலான வன்முறை குடும்பம் என்ற பெயரில் நீண்டகாலம் இருப்பது பெண்களின் வாழ்க்கையில் கசப்பான அனுபவமாக உள்ளது. திருமணம் மூலம் பெண்கள் கர்ப்பமாகிறார்கள். இருப்பினும் ஒரு பெண் தாம்பத்தியத்துக்கு சம்மதம் கூறுகிறாரா என்ற கேள்வி முக்கியமானது. இதனால் மனைவியின் அனுமதியின்றி கட்டாய உடலுறவு கொள்வது பாலியல் பலாத்காரமாக கருதலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.

ஐபிசி 375ல் வழக்கு?
திருமணத்துக்கு பின் கணவர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறுவது இன்னும் குற்றமாக அங்கீகரிக்கப்படாத நிலை உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் இந்திய தண்டனை சட்டம் 375ல் (பலாத்காரம்) வழக்குப்பதிவு செய்யலாமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இன்னொரு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த அமர்வின் விசாரணையின்போது இந்த விஷயம் முக்கியத்துவம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications