இந்த 5 விஷயங்களை செஞ்சா.. பொருளாதார மந்தநிலை சரியாகிடும்.. மன்மோகன் சிங் ஐடியா
Recommended Video
டெல்லி: நாட்டின் பொருளாதார மந்த நிலை இருப்பதை ஒப்புக்கொண்டு இந்த ஐந்து சீர்திருத்த நடவடிக்களை உடனே மத்திய அரசு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுனரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு என்ன காரணம் என்பது குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்து இந்தி தினசரி பத்திரிக்கை ஒன்றுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், பண மதிப்பிழப்பால் படுவீழ்ச்சி, சரக்கு சேவை வரியை தவறாக செயல்படுத்தியது, ஆகியவை பொருளாதார மந்த நிலைக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
தலைப்பு நிர்வாக பழக்கத்திலிருந்து மோடி அரசு வெளியே வர வேண்டும். ஏற்கனவே நிறைய நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. துறைசார் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, முழு பொருளாதார கட்டமைப்பையும் ஒரே நேரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே பொருளாதாரத்தை உயர் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஐந்து நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறேன்.
முதல் தீர்வு
முதலாவதாக, ஒரு குறுகிய காலத்திற்கு வருவாய் இழப்பைக் ஏற்படுத்தும என்றாலும் ஜிஎஸ்டியை "தர்க்கரீதியானதாக" மாற்ற (குறைக்க) வேண்டும்.
விவசாயத்தை புதுப்பிப்பது
இரண்டாவதாக விவசாயத்தை புதுப்பிப்பதுடன் கிராமப்புற நுகர்வு அதிகரித்தல் வேண்டும். இந்த இரண்டுக்குமான புதிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு உறுதியான மாற்று வழிகளை சொல்லி இருக்கிறோம். அதில் விவசாய சந்தைகளை விடுவிப்பதன் மூலம் பணம் மக்கள் கைகளில் புரளும்.
மூன்றாவது தீர்வு
மூன்றாவதாக, மூலதன உருவாக்கத்திற்கான அமைப்பில் பணப்புழக்கத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியமாகும்.
தொழில்களுக்கு புத்துயிர்
நான்காவது நடவடிக்கை ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மலிவு வீட்டுவசதி போன்ற முக்கிய துறைகளுக்கு புத்துயிர் அளிப்பதே ஆகும். அதற்கு எளிதான கடன்கள் தேவைப்படும், குறிப்பாக மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ), கடன் தேவைப்படுகிறது.
சீனா- அமெரிக்கா வர்த்தக போர்
ஐந்தாவது நடவடிக்கை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் வர்த்த போரின் காரணமாக வளர்ந்து வரும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதாகும். "அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரின் காரணமாக வெளிவரும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை நாம் அங்கீரித்து ஏற்க வேண்டும். சுழற்சி மற்றும் கட்டமைப்பு சிக்கல்களுக்கான தீர்வுகள் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி செய்தால் மட்டுமே 3-4 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதத்தை நாம் திரும்பப் பெற முடியும்," இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அரசு மறுக்க முடியாது
இந்திய பொருளாதார நிலை குறித்து பேசிய மன்மோகன் சிங், "இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய மந்த நிலையை அரசால் மறுக்க முடியாது. இந்தியா மிகவும் கடுமையான பொருளாதார மந்தநிலையில் உள்ளது. கடந்த காலாண்டில் 5% வளர்ச்சி விகிதம் என்பது கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவு. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் 15 ஆண்டுகளில் மிகக் குறைவு. பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.