92% கொரோனாவை எதிர்த்து போராடும்... ரஷ்யாவின் 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசிக்கு இந்தியா விரைவில் அனுமதி!
டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியா இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் என ஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) எதிர்பார்த்துள்ளது.
ஸ்பட்னிக் வி தடுப்பூசி 92% கொரோனா நோயை எதிர்த்து போராடும் அளவுக்கு செயல்திறன் மிக்கது என்று நேற்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனாலும் நாட்டில் எதிர்பார்த்தபடி பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.43 கோடி பேர் பாதிப்பு -7.62 கோடி பேர் மீண்டனர்
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனாலும் நாட்டில் எதிர்பார்த்தபடி பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
தடுப்பூசி போட தயக்கம்
தடுப்பூசி போட்ட பலருக்கு சிறு, சிறு ஒவ்வாமைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியா இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பயன்பாடு
தடுப்பூசி உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு முக்கிய பங்காளியாகும், மேலும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு உத்தரவு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் ... இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் எங்கள் தடுப்பூசி விநியோகத்தை தொடங்க முடியும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) கூறியுள்ளது.
92% கொரோனாவை எதிர்த்து போராடும்
இதனால் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்த மாதத்தில் இந்திய அங்கீகாரத்திற்கு ஆர்.டி.ஐ.எஃப் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. ஸ்பட்னிக் வி தடுப்பூசி 92% கொரோனா நோயை எதிர்த்து போராடும் அளவுக்கு செயல்திறன் மிக்கது என்று நேற்று ரஷ்யா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்த தடுப்பூசி மதிப்பாய்வு செய்யப்பட்ட பிற்பட்ட நிலை சோதனை முடிவுகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டது.இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அதிக செயல்திறன் மிக்க ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி கொடுக்கும் என்று தெரிகிறது.