உக்ரைனில் இருந்து திரும்பிய.. இந்திய மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்! அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். மாதம் இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. மூன்று பக்கங்களில் இருந்தும் உக்ரைன் நாட்டை பக்காவாக திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது ரஷ்யா!
முதலில் ரஷ்யாவின் தாக்குதல் வேகத்தைப் பார்த்து, இந்தப் போர் சில நாட்களிலேயே முடிந்துவிடும் என்றே உலக நாடுகள் கருதின. ஆனால், உண்மையில் நடந்ததே வேறு.

உக்ரைன் போர்
உக்ரைன் வீரர்கள் தக்க பதிலடி கொடுக்க போர் ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைன்- ரஷ்யா போரால் பல லட்சம் உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போரில் இருந்து தப்பிக்கச் சொந்த வீட்டையும் வாழும் பகுதிகளையும் விட்டும் வெளியேறி உள்ளனர். இது தொடர்பாக இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் போரை நிறுத்தவில்லை.

உலக நாடுகள்
இந்தப் போரால் உக்ரைன் மற்றும் ரஷ்யா மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. போரால் உக்ரைனில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எண்ணெய், சோளம் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. அதேபோல ரஷ்யாவிடம் இருந்து வரும் இயற்கை கேஸ்கள் தடைப்பட்டு உள்ளதால், பல ஐரோப்பிய நாடுகள் இருளில் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.

இந்தியா
உக்ரைன் போரால் இந்தியாவுக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. போர் காரணமாக உக்ரைனில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டது. போர் தொடங்கிய சமயத்தில் உக்ரைனில் விமான போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அண்டை நாடுகளுக்கு நடந்து சென்ற மாணவர்கள், அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

மாணவர்கள்
அப்படி மாணவர்கள் அழைத்துவரப்பட்ட பல மாதங்கள் கடந்துவிட்டது. இன்னும் கூட அவர்களால் உக்ரைன் நாட்டிற்குத் திரும்ப முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. தங்கள் எதிர்காலத்தைக் காப்பாற்ற மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.

அமைச்சர் ஜெய்சங்கர்
அந்த மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலத் தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வி தொடர்பாக மத்திய அரசு முக்கிய தகவல்களைப் பகிர்ந்து உள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "நாங்கள் உக்ரைன் அரசுடன் தொடர்பில் உள்ளோம்.

முக்கிய தகவல்
இந்த விவகாரம் குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசினேன். அங்கு நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த முன்வந்துள்ளன. இந்திய மாணவர்களுக்கு வேறு ஆப்ஷன்கள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம். சுகாதாரம், கல்வி அமைச்சகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கவனித்து வருகின்றன" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications