'கவலைப்படாதீங்க.. முதல் அலையைவிட 2ஆம் அலை ஆபத்தானது இல்ல, ஆனால்' ஐசிஎம்ஆர் தலைவரின் அதிமுக்கிய தகவல்
டெல்லி: கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகவே மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை முதல் அலையைவிடத் தீவிரமாக உள்ளதாகவும் இதில் குழந்தைகள் உட்பட சிறார்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகவும் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும், முதல் அலையைவிட இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளதாக ஐசிம்ஆர் தெரிவித்துள்ளது.

மூச்சு திணறல்
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் பால்ராம் பார்கவா கூறுகையில், இந்த முறை மிகக் குறைவாகவே அறிகுறிகள் உள்ளது தெளிவாக தெரிகிறது. மூட்டு வலி, சோர்வு, தசை வலி, வாசனை இழப்பு, தொண்டைப் புண் போன்ற அறிகுறிகள் முதல் அலையுடன் ஒப்பிடும்போது இந்த முறை குறைவாகவே காணப்படுகிறது. இருப்பினும், இந்த அலையில் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேநேரம் உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில் எவ்வித வேறுபாடும் இல்லை. மேலும், முதல் அலையிலும் சரி இரண்டாம் அலையிலும் சரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர், 45 வயதைக் கடந்தவர்களாகவே உள்ளனர். மக்களிடையே கொரோனா இரண்டாம் அலை குறித்து போதிய விழிப்புணர்வுகள் இல்லை. கொரோனா அதிகரிக்க இது ஒரு முக்கிய காரணம்.

காரணம் என்ன
கொரோனா பரவல் தற்போது நாட்டில் அதிகரித்து வருவதற்கு இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தான் காரணமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றிக் கூடுதல் ஆய்வுகள் தேவை. மேலும், கொரோனாவை கண்டறிய மற்ற முறைகளைக் காட்டிலும் ஆர்டிபிசிஆர் முறை முக்கியமானது. அதை மாநிலங்கள் அதிகளவில் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா பரவல்
நாட்டில் கடந்த 5 நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது நாட்டில் 19 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேகமாக அதிகரிக்கும் என்பது நாட்டிலுள்ள சுகாதார கட்டமைப்பில் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications