ரிஷப் பண்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி.. புருவத்தில் ஏற்பட்ட வெட்டுக்காயம்.. முக்கிய நிர்வாகி தகவல்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் விபத்தின் போது இடது கண்ணிற்கு மேல் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்திற்கு சிகிச்சையாக, மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளதால் ரிஷப் பண்ட் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப குறைந்தது 6 மாதங்களாகும் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சொந்த வேலை காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தனது பென்ஸ் காரில் பயணித்துள்ளார். ஓட்டுநர் இல்லாமல் தானாகவே ஓட்டிச் சென்ற ரிஷப் பண்ட், இரு நாட்களுக்கு முன் நள்ளிரவு மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு முன் தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் தனது காரில் டெல்லி புறப்பட்டுள்ளார். நள்ளிரவில் புறப்பட்ட ரிஷப் பண்ட், மீண்டும் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே காரை ஓட்டி வந்துள்ளார்.
அன்று சைரஸ் மிஸ்திரி.. இன்று ரிஷப் பண்ட்..! ரொம்பவே ஆபத்தானதாக மாறும் இந்திய சாலைகள்! என்ன பிரச்சினை
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்
தேசிய நெடுஞ்சாலையில் மங்களார் - நார்சன் பகுதிக்கு இடையே வந்துகொண்டிருந்த போது, காலை 5.30 மணியளவில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியதால், எதிர்முனைக்கு பறந்தது. இந்த விபத்தால் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரிஷப் பண்ட், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு வேகமாக குதித்துள்ளார்.
என்னென்ன காயங்கள்?
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் காரில் சீட் பெல்ட் அணியவில்லை. ஜன்னலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பண்டை, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் காப்பாற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் முதுகு, தலை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. ரிஷப் பண்ட் காயம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிஷப் பண்டின் நெற்றியில் இரு வெட்டுகள், வலது முட்டியில் தசைநார் கிழிவும், வலது மணிக்கட்டு மற்றும் விரல்களிலும் கூட காயம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முதுகிலும் சிராய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் சர்ஜரி
இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடல்நிலை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகி ஷியாம் சர்மா கூறுகையில், மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து சிகிச்சைகளுக்கும் ரிஷப் பண்ட் உடல்ரீதியாகவும், மனரீதியாக முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். விபத்தின் போது இடது கண்ணிற்கு மேல் புருவத்தில், பலமான காயம் ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக புருவத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனை சிகிச்சையளித்து வரும் மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.
எப்போது களம் திரும்புவார்?
அதேபோல் காலில் தசைநார் கிழிந்துள்ளதால், ரிஷப் பண்ட் மீண்டும் பழையபடி ஃபிட்னெஸுடன் திரும்புவதற்கு சில மாதங்களாகும். ஆனால் ரிஷப் பண்ட் விரைவில் நல்ல உடற்தகுதியுடன் திரும்ப என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்வோம் என்று தெரிவித்தார். இதனிடையே ரிஷப் பண்ட் மீண்டும் களத்திற்கு திரும்ப சில மாதங்களாகும் என்பதால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றை தவறவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.