தொடர் பணி நீக்கம்! வேலைவாய்ப்புக்கு “ஃபோக்கஸ்”.. பட்ஜெட்டில் விடியல் கிடைக்குமா? நோக்கும் இளைஞர்கள்
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் அதை உற்று நோக்குகின்றனர் இளைஞர்கள்.
டெல்லி: உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக முன்னணி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் அதை உற்று நோக்குகின்றனர் இளைஞர்கள்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூடியது. இதனை தொடர்ந்து இன்று 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால், மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சிறு குறு தொழில்கள் வளர்கிறது.. ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பே சாட்சி: பொருளாதார ஆய்வறிக்கை
பெரும் எதிர்பார்ப்பு
கடந்த 2022 ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரி வகிதங்கள் உயர்த்தப்பட்டது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டது போன்ற காரணங்களால் எரிபொருள், உணவு பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தன. இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
உற்றுநோக்கும் மக்கள்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவை தன்னுடைய பட்ஜெட் உரையை தொடங்குகிறார். அவரது உரையில் இடம்பெறப்போகும் முக்கிய அறிவிப்புகளை பல தரப்பட்ட உற்றுநோக்கி வருகின்றனர். அதில் குறிப்பாக இளைய தலைமுறையினர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பாரா என்று எதிர்பார்க்கின்றனர்.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்காக வரும் நிதியில் பெரும்பங்கு இளைஞர்களிடம் இருந்து வருவதை பொருளாதார ஆய்வு தெரிவித்தது. அதேபோல் வருங்கால வைப்பு நிதிக்கான நிகர வசூலும் படிப்படியாக அதிகரித்து வருவதை அந்த ஆய்வு காட்டுகிறது. அத்துடன் 2021 - 2022 நிதியாண்டில் 9 பெரும் துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆய்வறிக்கை
அதேபோல் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி துறையிலும் வேலைவாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக கடந்த 2020 - 2021 நிதியாண்டில் தொழிற்சாலைகளுக்கான ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதே நேரம் சிறுகுறு தொழில்நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
நிதர்சனம் வேறு
இதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள சிறு குறு தொழில்நிறுவனங்களை ஊக்கப்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்கள் இப்படி கூறினாலும் நிதர்சனத்தில் வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது.
வேலையில்லா திண்டாட்டம்
அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருவதாலும், மத்திய அரசு பணிகளின் நியமனம் தாமதம் காரணமாகவும் அதன் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு பயன்படாமல் உள்ளன. வெளிநாடுகளிலும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அடிக்கடி மொத்தமாக பணி நீக்கம் செய்யப்படுவதில் அங்கு வசிக்கும் இந்தியர்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஐடி துறை இதில் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளன.
வெளிநாட்டு வேலை
இதன் தாக்கம் காரணமாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி நீக்கம் நடைபெற்று உள்ளது. அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்நாட்டு மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கொண்டு வரப்பட்ட சட்டத்தால் அங்கும் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. இந்த சூழலில் பட்ஜெட்டில் தங்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமா? என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றன.