சாப்பாடு இல்லாதவனுக்கு கேக்கா? பழமொழியால் நிர்மலா சீதாராமனை கலாய்த்த சுப்பிரமணியசாமி.. கிண்டல்!
டெல்லி: ‛‛பணவீக்கத்தால் ஏழைகளை விட பணக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறுவது என்பது வயிற்று பசியை போக்க தானியம் இன்றி தவிக்கும் ஏழைகளை கேக் சாப்பிட சொல்வது போன்றதாகும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பழமொழியால் கலாய்க்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
கொரோனா பரவலால் இந்தியாவின் தொழில்கள் முடங்கின. இதனால் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் கூட பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆஹா.. சுப்பிரமணிய சாமி ஏன் இப்படி சொல்றாரு.. இது பாஜகவுக்கு தெரியுமா.. முக்கிய முடிவு வர போகிறதா?
மத்திய அரசுக்கு எதிர்ப்பு
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் சமீபத்தில் முடிந்தது. இந்த தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டரின் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பணவீக்கம் அதிகரிப்பு
மேலும் நாட்டின் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றனர். மேலும் மத்திய அரசின் இத்தகைய செயல்பாட்டால் விரைவில் இலங்கையை போல் இந்தியா மாறிவிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
சுப்பிரமணி சுவாமி கருத்து
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛இந்த நிதியாண்டில் பணவீக்கம் என்பது ஏழைகளை விட பணக்காரர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்'' என மத்திய நிதி அமைச்சகம் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, சுப்பிரமணியசாமி சீண்டியுள்ளார். அதில் ‛‛உண்மையில் அவர் (நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) இப்படி கூறியிருக்கிறாரா?. இது உண்மையெனில் தானியத்துக்கே வழிஇல்லாத ஏழைகளிடம் கேக் சாப்பிட சொல்லும் பிரஞ்சு பழமொழிக்கு இணையானதாக இது இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
பழமொழியுடன் கலாய்ப்பு
இதன்மூலம் அவர் மத்திய நிதி அமைச்சகத்தை கலாய்த்துள்ளார். அதாவது ஏழை ஒருவர் தனது வயிற்று பசியை போக்க தானியம் வாங்கவே முடியாத நிலையில் அவரை கேக் உண்ண சொல்வது அறியாமையின் வெளிப்பாடாகும். அதேபோல் தான் பணவீக்கத்தால் ஏழைகளை விட பணக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அறியாமையின் உச்சம் என்பதை மறைமுகமாக சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.