2ஆம் அலை பிரச்னைகளே தீர்க்கப்படவில்லை.. இதில் அடுத்த அலையை எப்படி சமாளிப்போம்?ஷாக் அடிக்கும் தரவுகள்
டெல்லி: கொரோனா பாதிப்பு இப்போது கட்டுக்குள் இருந்தாலும், 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்திலிருந்த பிரச்சினைகள் இன்னும் தொடர்வதால், மூன்றாம் அலை சிறியளவில் ஏற்பட்டாலும், அதை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் தொடர்கிறது..
இந்தியாவில் டெல்டா கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.
நாட்டிலுள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. தினசரி பாதிப்பும், உயிரிழப்புகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தன.

கொரோனா 2ஆம் அலை
சில வாரங்கள் வரை தொடர்ந்து உச்சத்திலிருந்த வைரஸ் பாதிப்பு, அதன் பின்னர் மெல்ல படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இப்போது கடந்த சில வாரங்களாகவே நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 40 முதல் 50 ஆயிரத்திற்குள்ளாகவே பதிவாகி வருகிறது. இந்நிலையில், தற்போது பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏனென்றால், கொரோனா 2ஆம் அலை தொடங்குவதற்கு முன்னரும் இதேபோலத் தான் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

3ஆம் அலை எப்படி இருக்கும்
இது மட்டுமின்றி 2ஆம் அலையின் சமயத்தில் எப்படி கொரோனா முடிந்துவிட்டது என பெரும்பாலான இந்தியர்கள் எண்ணினார்களோ, அதே மனநிலைதான் இப்போதும் உருவாகியுள்ளது. நிலைமை மறுபுறம் மூன்றாம் அலை குறித்த தரவுகளும் வெளியாக பகீர் கிளப்பி வருகிறது. ஒரு சிலர் மூன்றாம் அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆய்வாளர்கள் 2ஆம் அலையுடன் ஒப்பிடுகையில் 3ஆம் அலை பாதிப்பு, அவ்வளவு மோசமாக இருக்காது என்கிறார்கள். குறிப்பாக, சில ஆய்வாளர்கள் இந்த மாதமே கொரோனா 3ஆம் அலை தொடங்க வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கின்றனர்,

தெளிவான தரவுகள் இல்லை
ஆனால், இந்த கொரோனா வைரசை பொறுத்தவரை யாராலும் எதையும் உறுதியாகக் கூற முடியாது என்பதையே கடந்த காலம் நமக்கு உணர்த்துகிறது. எனவே, அடுத்து வரவிருக்கும் 3ஆம் அலையை எதிர்கொள்ள நாம் தாயாராக உள்ளோமா என்ற மகிப் பெரிய கேள்வி நம்முன் எழுந்துள்ளது. இதற்குப் பலரும் பல விதமாகப் பதில் அளித்தாலும், நாம் நினைக்கும் அளவுக்கு கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை என்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாகப் பேரழிவை ஏற்படுத்திய 2ஆம் அலையை நாம் கடந்துவிட்டது, எதையும் சமாளித்துவிடலாம் என்ற அதிக தன்னம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், கொரோனா 2ஆம் அலை பற்றியே நமக்கு இன்னும் முழுமையாகத் தெரியாது. உண்மையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் உள்ளிட்டவை தெளிவாகத் தெரியவில்லை. அரசின் தரவுகளும் எந்தளவு துல்லியமான உள்ளது என்பது நமக்குத் தெரியவில்லை.

கொரோனா ஆன்டிபாடிகள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் 21 மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா ஆன்டிபாடி உள்ளது என்பது குறித்து நான்கு கட்ட ஆய்வுகளை நடத்தியுள்ளது. இதில் சுமார் மூன்றில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட சுமார் 40 கோடி இந்தியர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.40 கோடி என்பது சாதாரண இல்லை. இந்தச் சூழலில் அடுத்த ஒரு அலை ஏற்பட்டால், இங்கு ஏற்படும் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
இதில் ஆபத்தான போக்கு என்னவென்றால் கொரோனா உயிரிழப்புகள் குறித்த தெளிவான தரவுகள் நம்மிடம் இல்லை. 5 லட்சத்திற்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், சில ஆய்வுக் கட்டுரைகளில் கொரோனா உயிரிழப்புகள் 20 முதல் 30 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் இந்தியாவில் 47 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

சுகாதார உட்கட்டமைப்பு
சில மாநிலங்கள் தங்கள் நற்பெயரைக் காத்துக்கொள்ள கொரோனா உயிரிழப்புகளை மறைத்துள்ளன. இதனால் கொரோனா 2ஆம் அலை எந்த இடத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, மூன்றாம் அலை வந்தால் அதை நாம் எப்படி எதிர்கொள்வோம் என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது. நமது நாட்டிலிருந்து சுகாதார உள்கட்டமைப்பு எந்தளவு மோசமாக இருந்தது என்பதையே இரண்டாம் அலை நமக்கு உணர்த்தியது. கடந்த காலத்தில் யார் எந்தளவுக்கு எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், மூன்றாம் அலையில் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை நம்மால் தெளிவாக மதிப்பிட முடியாது.

கொரோனா வேக்சின்
அடுத்து வேக்சின் பணிகள், இந்தியாவில் வேக்சின் பணிகள் இப்போது வரை தட்டுத்தடுமாற்றதிலேயே இருக்கிறது. வேக்சின் பணிகள் சரிவர நடக்காமலிருந்ததே டெல்டா கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது. இதன் பிறகே வெளிநாடுகளுக்கு வேக்சின் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் நிலைமை சரியாகவில்லை. ஏனென்றால் வேக்சின் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், இவை பெரியளவில் பலன் அளிக்கவில்லை.
Recommended Video

mRNA-based வேக்சின்
டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக பைசர், மாடர்னா போன்ற mRNA-based தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் சிறப்பான பலனைத் தந்தது. இருப்பினும், முதலில் இந்தியா இந்த வேக்சின்களை பெற பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா 2ஆம் அலைக்குப் பிறகு இதனைப் பெற முயற்சி எடுத்த போது, ஏற்கனவே பல்வேறு நாடுகளும் ஆர்டர் அளித்துவிட்டன. இதைத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு பிரச்சினை. இப்படிப் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

சமாளிக்க முடியுமோ
குறிப்பாக கொரோனா 2ஆம் அலை நமக்கு உணர்த்தியது ஒன்றுதான். அதாவது இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டினால்கூட மிக மோசமான ஒரு கொரோனா அலை ஏற்பட்ட போது சமாளிக்க முடியவில்லை, ஆக்சிஜன், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட மற்ற நாடுகளை சார்ந்திருந்த வேண்டிய சூழல் இருந்தது. இது கொரோனாவின் தீவிர தன்மையை நமக்கு உணர்த்துகிறது. அதேநேரம் எந்தெந்த காரணங்களால் கொரோனா 2ஆம் அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதோ, அந்த பிரச்சினைகள் பெரும்பாலும் அப்படியே உள்ளது. எனவே, மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை நாம் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications