பாகிஸ்தானை காப்பாற்ற, தப்ப வைக்க முயற்சிக்கிறாரா ப.சிதம்பரம்.. லோக்சபாவில் கண் சிவந்த அமித்ஷா
டெல்லி: பாகிஸ்தானை காப்பாற்ற, தப்ப வைக்க முயற்சிக்கிறாரா ப.சிதம்பரம் என லோக்சபாவில் அமித்ஷா கேள்வி எழுப்பினார். மேலும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா என்றும், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும், மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது எனவும் அமித்ஷா பேசினார்.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை மோடி கொன்றார்.. மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது தான்.. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் கொல்லப்பட்டுள்ளார்.. ஆபரேஷன் சிந்தூர் மூலம் 22 நிமிடங்களில் பாகிஸ்தானின் 9 முகாம்களை அழித்தோம்..
பாகிஸ்தானை காப்பாற்ற, தப்ப வைக்க ப சிதம்பரம் முயற்சிக்கிறாரா? ப சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தருகிறார்.. பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம் என ப சிதம்பரம் கேட்டார்.. ஆதாரம் இருக்கிறது.. பஹல்காம் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும், துப்பாக்கிகளும் எஃப் எஸ் எல் அறிக்கையுடன் ஒத்துப்போகின்றன.
மன்மோகன் சிங் அரசை போல் அல்ல
பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா.. முந்தைய அரசின் போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.. மோடி அரசு மன்மோகன் சிங் அரசை போல் வேடிக்கை பார்க்காது.. சிந்து நதி நீர் ஒப்பந்தம் காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாகியதற்கு காரணமே நேரு தான்.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
காங்கிரஸ் அரசு செய்தது என்ன?
பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளது போல் தெரிகிறது. பயங்கரவாதிகளின் மதத்தை மட்டுமே எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன. அவர்கள் (எதிர்க்கட்சிகள்) பாகிஸ்தானுடன் பேசுகிறார்களா? மதத்தின் பெயரை கேட்டு குடும்பத்தின் முன்பே பயங்கரவாதிகள் கொல்லபட்டுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன்.
பஹல்காம் தாக்குதலில் தங்கள் நேசத்திற்கு உரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். 2005 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 27 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் அரசாங்கம் செய்தது என்ன? பாகிஸ்தானுக்கு வெறுமெனே ஆவணங்களை மட்டுமே அனுப்பி கொண்டு இருந்தார்கள்.
ப சிதம்பரம் கூறியது என்ன?
முன்னதாக தனது கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அது தொடர்பாக விளக்கம் அளித்து இருந்தார். சிதம்பரம் கூறுகையில், "தனது பேச்சின் சில பகுதிகளை மியூட் செய்து வேண்டும் என்றே தவறாக பரப்பப்படுகிறது" என்று கூறியிருந்தார்.
அமித்ஷா மேலும் கூறியதாவது:- பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாதத்திற்கும் மூலக்காரணம் காங்கிரஸ் தான். காங்கிரஸ் மட்டும் பிரிவினையை ஏற்காமல் இருந்து இருந்தால், பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருந்து இருக்காது. 2002 ஆம் ஆண்டு அடல் ஆட்சியின் போதுதான் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது.
ராகுல் காந்திக்கு சவால் விடுக்கிறேன்
காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ராஜ்யசபாவில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் சட்டம் நிறைவேற்ற முடியவில்லை. பிறகு, கூட்டுக்கூட்டத்தில் இந்த சட்டம் நிறைவேறியது. POTA சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானது. யாரைக்காப்பாற்ற காங்கிரஸ் விரும்பியது? வாக்கு வங்கிக்காக பயங்கரவாதிகளை காப்பாற்ற காங்கிரஸ் முயன்றது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலம் முடிந்ததும் மன்மோகன் சிங் - சோனியா அதிகாரத்திற்கு வந்தனர். முதல் வேலையாக அவர்கள் செய்தது பொடா சட்டத்தை ரத்து செய்ததுதான். யார் பலன் அடைவதற்காக இது ரத்து செய்யப்பட்டது ராகுல் காந்திக்கு ஒரு சவாலை நான் விடுக்கிறேன். பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ன செய்தீர்கள் என்பதை அவையில் தெரிவிக்க வேண்டும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications