விண்வெளி துறையிலும் தனியார்மயம்.. நாட்டின் முதல் தனியார் ராக்கெட்.. விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ
டெல்லி: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்வெளியில் அடுத்த வாரத்தில் ஏவப்பட உள்ளது. 'ஸ்கைரூட் ஏர் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது.
'விக்ரம்-எஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இரண்டு இந்திய செயற்கைக்கோள் மற்றும் ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணிற்கு கொண்டு செல்கிறது.
விண்வெளி துறையில் அந்நிய நேரடி முதலீடு வரவேற்பளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில் இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

தனியார் ராக்கெட்
விண்வெளி துறையில் இந்தியா தனக்கென தனி முத்திரையை பதிக்க தொடங்கியுள்ள நிலையில், இதில் அடுத்தகட்டமாக தனியார் ராக்கெட்டுகளை விண்ணில் ஏவவும் தயாராகியுள்ளது. இதன்படி இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
'ஸ்கைரூட் ஏர்ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான பவன் குமார் சந்தனா கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ராக்கெட்டை தயாரித்து வந்தோம். தற்போது இதனை விண்ணில் ஏவுவதற்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன.

உருவாக்கம்
இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று நெருக்கடி எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் கடின உழைப்பால் தற்போது ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த திட்டத்திற்கு 'பிரரம்ப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கு ரூ.403 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்திற்கு 'விக்ரம் சாராபாய்' நினைவாக 'விக்ரம்' என பெயரிட்டுள்ளோம்.

தொடர் திட்டம்
தற்போது ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் விண்வெளியின் துணை சுற்றுப்பாதையில் பயணிக்கும். இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 'விக்ரம்-I' எனும் மற்றொரு ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம். இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து, ஸ்கைரூட் இணை நிறுவனரும், சிஓவுமான நாகா பரத் தாகா இத்திட்டம் பற்றி கூறுகையில், "இந்த ராக்கெட் 3 செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்கிறது. ஆனால் இதன் நோக்கம் மற்றும் எந்த நிறுவனங்கள் சார்பில் இது விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை வெளிப்படையாக சொல்ல முடியாது.

சோதனை
மற்றபடி ராக்கெட்டின் தனிச்சிறப்பு குறித்து சொல்வதெனில், இது முழுக்க முழுக்க திட எரிபொருளை கொண்டு இயங்கும். இது வரும் 12-16ம் தேதிகளுக்குள் வானிலை சாதகமாக உள்ள நாளில் விண்ணில் ஏவப்படும். இதற்கு முன்னர் ராக்கெட் சரியாக செயல்படுகிறதா? என்பதை சோதனை செய்து பார்க்க இஸ்ரோவின் சோதனை களத்தை பயன்படுத்தியுள்ளோம். இஸ்ரோ எங்களுக்கு முழு ஆதரவை அளித்துள்ளது" என்று நாகா பரத் தாகா கூறியுள்ளார். இந்திய விண்வெளி துறையில் தனியார் முதலீடுகள் செய்யப்படும் என மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வந்த நிலையில் தற்போது நாட்டின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.












Click it and Unblock the Notifications