என்ன பயமா?.. ராகுலின் டீ சர்ட் ரேட்டை சொன்னா சிரிப்பீங்க.. பணவீக்கத்தை பேசுங்களேன்! காங். சீனியர்
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ சர்ட் எவ்வளவு ரூபாய், எங்கே வாங்கியது என தெரிந்தால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சிரிப்பீர்கள் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் 150 நாட்களுக்கு இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற ஒரு திட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. இதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இந்த யாத்திரையில் 53 கி.மீ தூரத்தை கடந்த ராகுல் காந்தி கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸின் இந்த முன்னெடுப்பை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. தேசத்துக்கான நடைபயணத்தில் ராகுல் காந்தி வெளிநாட்டு டீசர்ட் அணிந்திருக்கிறார் என விமர்சனம் எழுந்தது.
ராகுல் காந்தி தேடுவது கடவுளையா? பிரச்சனையா?.. நடிகை கஸ்தூரிக்கு வந்த திடீர் ‛டவுட்’! சுளீர் கேள்வி
ராகுல்காந்தி யாத்திரை
அதாவது ராகுல் காந்தி யாத்திரைக்கு போட்டிருந்தது பர்பெர்ரி டீ சர்ட், அதன் விலை ரூ 41 ஆயிரம் என பாஜக விமர்சித்து தேசமே இங்கே பாருங்கள் என ட்வீட் போட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்தது. ஆடையை பற்றி பேசுவதானால் பிரதமர் மோடியின் கோட், வாட்ச், கண்ணாடி பற்றி பேசலாமா என கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சந்தித்தார். அவர் கூறுகையில் டீசர்ட் பற்றியும் அன்டராயர் பற்றியும் பேச நான் விரும்பவில்லை. ராகுல் காந்தி வாங்கிய டீசர்ட் ரூ 41 ஆயிரம் என விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.
ராகுல் டீசர்ட்
ராகுல் அணிந்துள்ள டீ சர்ட் என்ன விலை எங்கே வாங்கப்பட்டது என நான் சொன்னால் உங்களுக்கு சிரிப்புதான் வரும். இது பாரத் ஒற்றுமை யாத்திரை. இதில் பொருளாதார சமூக விவகாரங்களை பற்றி மட்டுமே பேச வேண்டும். பணவீக்கம்,விலைவாசி உயர்வு, சமூக பிரச்சினைகளை பேச ஆளும் பாஜக அஞ்சுகிறது. ஆனால் பொய் மூட்டைகளை கட்டவிழ்க்கிறது.
ஆக்கப்பூர்வம்
இவ்வாறு பேசுவதற்கு நிறைய ஆக்கப்பூர்வமான பிரச்சினை இருக்கும் போது டீ சர்ட், ஷூ, பற்றியெல்லாம் பேசுவதை பார்த்தால் பாஜகவினருக்கு காங்கிரஸின் நடைபயணத்தை கண்டு அச்சம் எழுந்துவிட்டது. அதனால்தான் சமூகவலைதளங்களில் பொய்களுக்கான ஒரு நிறுவனத்தையே தொடங்கி நடத்திவருகிறார்கள் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.