ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் பீட்டா வலியுறுத்தல்!
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்துக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கில் அனைத்து தரப்பும் அறிக்கைகள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 23 -க்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவதல் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும். ஆனால் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை நடத்த மத்திய அரசு தடை விதித்தது.
மத்திய அரசின் தடைக்கு எதிராக தமிழகத்தில் தன்னெழுச்சியான கிளர்ச்சிந நடைபெற்றது. இது ஜல்லிக்கட்டுப் புரட்சி, மெரினா புரட்சி என அழைக்கப்படுகிறது. உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது ஜல்லிக்கட்டுப் போராட்டம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாட்கள் போலீசாரால் மிக மோசமாக ஒடுக்கப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தில் தடைபட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
ஒருபக்கம் டைடல் பார்க்.. இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு மைதானம்.. மதுரையில் அதிரடி காட்டும் திமுக!
இம்மனுக்கள் மீது நேற்று விசாரணை நடைபெற்றது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த விவகாரத்தை ஜனவரி மாதத்துக்கு முன்பு விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதார், எதிர் மனுதாரர்கள் என அனைத்து தரப்பும் 3 வாரங்களுக்குள் இவ்வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.