டெல்லி ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு நடத்திய ராம்பகத் கோபால் பஜ்ரங் தள் பேரணியில் பங்கேற்றவர்
டெல்லி: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ராம் பகத் கோபால், இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் இயக்கத்தின் பேரணியில் பங்கேற்றவர் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழகத்தில் போலீசார் கண்முன்னாலேயே மாணவர்கள் மீது ராம் பகத் கோபால் என்ற இளைஞர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம் பகத் கோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது, சமூக வலைதளங்களில் வெளியான கருத்துகளை உள்வாங்கியே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தம்மை யாரும் மூளைச்சலவை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் நடத்திய போராட்டத்தில் தாம் பங்கேற்றதாகவும் ராம் பகத் கோபால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மேலும் ராம் பகத் கோபாலின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த சில நாட்களாக ராம் பகத் கோபால் வீட்டில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்ததாகவும் இது அண்டை வீட்டாருக்கும் தெரியும் என கூறியுள்ளனர்.
முன்னதாக தமது நண்பர்களுடன் இணைந்து சி.ஏ.ஏ. ஆதரவு பேரணி ஒன்றையும் நடத்த ராம் பகத் கோபால் முயற்சித்திருக்கிறார். ஆனால் இத்திட்டம் நிறைவேறவில்லை. இதனையடுத்து நண்பர் ஒருவரிடம் துப்பாக்கியை கடனாக வாங்கி ஜாமியா மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ராம் பகத் கோபால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications