பொழுது விடிஞ்சா போதும்.. ஒரே பொய்தான்.. கங்கனா ரனாவத் டுவிட்டர் கணக்கு ஒரேயடியாக முடக்கம்.. வார்னிங்
டெல்லி: உண்மைக்குப் புறம்பாக.. ஓவராக பேசித் திரிந்த நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனம் இதற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கு, எந்த காரணத்துக்காக முடக்கப்பட்டதோ, அதே காரணத்தை காட்டித்தான் கங்கனா ரனாவத் விஷயத்திலும் சாட்டையை சுழற்றியுள்ளது டுவிட்டர்.
வெறுப்பை தூண்டுவது, வன்முறையை விதைப்பது போன்றவற்றை காரணமாக சொல்லி கங்கனா ரனாவத் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது டுவிட்டர்.

சுஷாந்த் சிங்
கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. எப்போதுமே மக்கள் பிரச்சினைகளில் அவரது கருத்து மத்திய அரசுக்கு ஆதரவாக இருந்து உள்ளதே தவிர, மக்களின் குரலாக இருந்தது கிடையாது. இவரது கருத்து அதிக அளவு சர்ச்சைக்குள்ளானது நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விஷயத்தில்தான். பீகார் தேர்தல் காலகட்டத்தில் சுஷாந்த் சிங் விவகாரத்தை பெரிதுபடுத்தியபடியே இருந்தார் கங்கனா.

மத்திய படை பாதுகாப்பு
ஒரு கட்டத்தில், சிவசேனா தலைவரை சஞ்சய் ராவத் தனக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே, மத்திய அரசு அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்போக, அது நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி கருத்து
இப்போது கொரோனா நோய் பரவல் ஏற்பட்டு ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மறுபடி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதிகப்படியான இறப்புகளுக்கு அதிகப்படியான மக்கள் தொகைதான் காரணம் என்றும், மக்கள்தொகை கட்டுப்பாடுகளுக்கு கடுமையான சட்டங்கள் தேவை, மூன்றாவது குழந்தை பிறந்தால் அபராதம் அல்லது சிறைவாசம் கொடுக்க வேண்டுமென்றும் பதிவிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். முன்னதாக டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி இருந்தார் கங்கனா ரணாவத்.

மரங்களை நடனுமாம்
2 நாட்கள் முன்பு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஆக்சிஜன் பற்றாக்குறை போக்க அதிக மரங்களை நட வேண்டும் என்று அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இப்படி தொடர்ந்து தேவையற்ற கருத்துக்களை கூறி வந்த கங்கனா ரனாவத் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை நடைபெறுவதாகவும் பாஜகவினர் தாக்கப்பட்டதாகவும் கூறி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

போதும்ப்பா
பொறுத்து பொறுத்து பார்த்த ட்விட்டர் நிர்வாகம், டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது. கங்கனா ட்வீட்டுகள் வன்முறையை தூண்டுவதாக ட்விட்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் காலத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை டுவிட்டரில் கூறி வந்தார். கறுப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் இடையே பகைமையை உண்டு செய்யும் வகையில் அவரது கருத்துக்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் டிரம்ப் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டது.

எல்லை மீறிவிட்டார்
ஆளுங்கட்சி எதை செய்தாலும் அதற்கு ஆதரவு தருவது, அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறுவது என தொடர்ந்து அதகளம் செய்துவந்தார் கங்கனா ரனாவத். ஆனால், ஒரு மாநிலத்தில் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது ட்விட்டர் பதிவுகள் எல்லைமீறி போய்விட்டன. அத்துமீறிய இந்த பொறுப்பற்ற செயலால் டுவிட்டர் நிர்வாகம் சாட்டையை சுழற்றி உள்ளது.

எச்சரிக்கை
இது இவரைப்போல உள்ள இன்னும் பல பிரபலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆயிரம்தான் வேறு சோஷியல் மீடியாக்கள் இருந்தாலும், ட்விட்டர் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சோஷியல் மீடியாவாக இருக்கிறது. எனவே, இதுபோன்ற வன்முறை கருத்துகளை பரப்பிய ஒருவருக்கு எதிராக அந்த நிறுவனம் சாட்டையை சுழற்ற ஆரம்பித்திருப்பது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications