கர்நாடகா தேர்தல்- ஏப்.11-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்- மீண்டும் மேகதாது அணை விஸ்வரூபம்?
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 11-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை 100 ஆண்டுகளுக்கும் மேலான விவகாரம். காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 192 டிஎம்சி நீர் வழங்க காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றமானது காவிரி வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் அளவை 177.25 டிஎம்சியாக குறைத்தது. காவிரி நதிநீர் வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த உருவாக்கப்பட்டது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி நதிநீர் பங்கீடுகள் தொடர்பாக முடிவெடுக்கத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் மேகதாது அணையை கர்நாடகா தொடர்ந்து எழுப்பி வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை எனும் புதிய அணை கட்டுவதற்கும் தொடர்பு இல்லை; மேகதாது விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளும் தட்டப்பட்டன.
தற்போது கர்நாடகாவில் மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 13-ந் தேதி கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த பின்னணியில் ஏப்ரல் 11-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை பிடித்தது பாஜக. இம்முறை கர்நாடகாவில் காங்கிரஸுக்குதான் பேராதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. கர்நாடகா பாஜக எம்.எல்.ஏக்கள் கடைசிநேரத்தில் காங்கிரஸுக்கு தாவும் போக்கும் தொடங்கி இருக்கிறது. இது பாஜ்காவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.
கர்நாடகாவில் காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது அணை விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்நிலையில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு, மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி புதியதாக குட்டையைக் குழப்பக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications