என் தலைவரை விமர்சிக்காதீங்க.. கண்ணியத்தோடு போங்க! ராகுலை சாடிய குலாம் நபி ஆசாத்தை விளாசிய ஜோதிமணி
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் தான் கண்ணியத்தோடு நடந்துக்கோங்க என குலாம் நபி ஆசாத்துக்கு ஜோதிமணி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர் சோனியா காந்தியின் வலதுகரமாக செயல்பட்டு வந்தார். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது மத்திய அமைச்சராக இருந்தார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராகவும் செயல்பட்டு வந்தார். இதுதவிர காங்கிரஸ் கட்சியில் முடிவுகள் எடுக்கும் குழுவில் அங்கம் வகித்து வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சில நிமிடங்கள் தான்.. குலாம் நபி ஆசாத்தை வரவேற்கும் பாஜக!
குலாம் நபி ஆசாத்
இந்நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அதிருப்தி அடைந்தார். அவர்களிடம் இருந்து விலகி நிற்க துவங்கினார். 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தபோது கட்சி தலைமை மாற்றம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் உள்பட 23 தலைவர்கள் தனியாக ஆலோசனைகள் நடத்தினர். இதில் குலாம்நபி ஆசாத் முக்கிய நபர் ஆவார். மேலும் கட்சி செயல்பாடு, தலைமை குறித்து அவர்கள் வெளிப்படையாக கருத்துகள் தெரிவிக்க தொடங்கினர்.
குலாம் நபி ஆசாத் ராஜினாமா
இதற்கிடையே தான் சமீபத்தில் அவரது ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படவில்லை. இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்த சில மணிநேரத்தில் அவர் ராஜினாமா செய்தார். இதனால் விரைவில் அவர் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதன்படி இன்று குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து உள்ளார்.
ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி உள்ளார். அதில் ராகுல்காந்தி மீது அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 2013 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ராகுல்காந்தியின் குழந்தைதனமான முடிவு தான் காரணம் எனவும், கட்சியில் கலந்தாலோசனை முறையை ராகுல்காந்தி ஒழித்துவிட்டதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
ஜோதிமணி விமர்சனம்
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம்நபி ஆசாத் விலகிய நிலையில் ராகுல்காந்தி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதற்கு தமிழகத்தின் கரூர் எம்பியான ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நீங்கள் பல தசாப்தங்களாக பொறுப்பில் இருந்த மாநிலத்தின் தற்போதைய தலைவிதி என்ன? என்பது பற்றி அதிர்ஷ்டவசமாக கூற மறந்துவிட்டீர்கள். எனது தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் பதவியேற்பதற்கு முன்பே இது நடந்தது. தயவு செய்து கருணையோடும், கண்ணியத்தோடும் வெளியேறுங்கள். ஏனென்றால் கட்சியின் மூத்த தலைவர் என்ற முறையில் நாங்கள் இன்னும் உங்களை மதிக்கிறோம்'' என கூறியுள்ளார்.
ராகுலிடம் வரலாற்று பொறுப்பு
மேலும் இன்னொரு பதிவில், ‛‛கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் குவிவதை விட கட்சிக்குள் ஜனநாயகத்தோடு அனைவருக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்பினார். கட்சி மற்றும் மக்கள் ஆதரவுடன் இந்த மகத்தான தேசத்தை காப்பாற்றும் வரலாற்று பொறுப்பை ராகுல்காந்தி தோள்களில் சுமக்கிறார்'' எனவும் ஜோதிமணி கூறியுள்ளார்.