இந்திய பெருங்கடல் பகுதியில் சுற்றும் சீன கப்பல்கள்.. உன்னிப்பாக கண்காணிக்கிறோம்- இந்திய கடற்படை
டெல்லி: 2047- ஆம் ஆண்டுக்குள் கடற்படையில் இந்தியா தற்சார்பு அடையும் என்றும் இந்திய பெருங்கடல் எல்லைப்பகுதியில் சீன கப்பல்கள் சுற்றுவதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
உலகின் 3-வது பெரிய கடலாக இந்திய பெருங்கடல் உள்ளது.
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் விக்டோரியா மற்றும் அமிரண்டோ தீவுகள் உள்ளன.

இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள்
வடக்குப்பகுதியில் மாலத்தீவு, இலங்கை போன்ற தீவு நாடுகளும் இருக்கின்றன. உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் தான் வசித்து வருகின்றனர். உலக அளவில் அதிகமான வளர்ந்து வரும் நாடுகளும் இந்திய பெருங்கடல் பகுதியில்தான் அமைந்துள்ளன. வர்த்தகத்தை பொறுத்தவரை 80 சதவீதம் வர்த்த போக்குவரத்து இந்திய பெருங்கடல் பகுதி வழியாகத்தான் நடைபெற்று வருகிறது.

மிகவும் விழிப்புடன்..
உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வரும் சீனா, இந்திய பெருங்கடல் பகுதியிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளவும் சீனா முனைப்பு காட்டி வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிராக அமையும் என்பதால் இந்தியாவும் இந்த விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் உள்ளது.

உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த இந்திய கடற்படை தளபதி, இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறினார். இது தொடர்பாக இந்திய கடற்படை தளபதி ஆர்.ஹரிகுமார் பேசியதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் பல சீன கப்பல்கள் இயங்கி வருகின்றன. 4-6 சீன கடற்படை கப்பல்கள் மற்றும் சில ஆய்வு கப்பல்கள் குறித்து நாங்கள் அறிவோம்.

இந்தியா தற்சார்பு அடையும்
இந்திய பெருங்கடல் பகுதியில் பெருமளவு சீன மீன்பிடி கப்பல்களும் இயக்கப்படுகின்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இந்திய பெருங்கடல் பகுதி முக்கியமான பகுதி என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இந்த கடல் பகுதியில் பெருமளவு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளுக்காக பிற நாடுகளை தொடர்ந்து சார்ந்து இருக்க முடியாது. 2047- ஆம் ஆண்டுக்குள் கடற்படையில் இந்தியா தற்சார்பு அடையும்" என்றார்.












Click it and Unblock the Notifications