லவ் ஜிகாத்: மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை
மதங்களுக்கு இடையேயான கலப்புத் திருமணத்தை தடுக்க, மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று நாடாளுமன்ற ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: திருமணத்திற்காக மதம் மாறுவதை தடை செய்யும் லவ் ஜிகாத் சட்டம் மத்திய அரசு கொண்டுவரவுள்ளதா என ராஜ்யசபாவில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. மேலும், அவ்வாறு திருமணத்தின்போது மதம் மாறுவது செல்லாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்கள் திருமணத்தைப் பயன்படுத்தி இந்துக்களை மதம் மாற்றம் செய்வது, லவ் ஜிகாத் எனக் கூறி, இந்த லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் கொண்டுவந்தன.
லவ் ஜிகாத் நடவடிக்கைகளுக்கு எதிராக கர்நாடக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்கும் என்று அந்த மாநில முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். காதல் என்ற பெயரில் இளம்பெண்கள் மயக்கப்பட்டு, பணத்தாசை காட்டியும் திருமண ஆசை காட்டியும் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். இதை மிகவும் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். மதரீதியாக, திருமணம் என்ற பெயரில் மதமாற்றத்தில் ஈடுபடுவதற்கு எதிராக சட்டம் கொண்டு வருவதற்கு கர்நாடக அரசு யோசித்து வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.
இந்தச் சட்டங்கள் லவ் ஜிகாத் சட்டம் என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், திருமணத்திற்காக மதம் மாறுவதை தடை செய்யும் லவ் ஜிகாத் சட்டம் மத்திய அரசு கொண்டுவரவுள்ளதா என ராஜ்யசபாவில் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "மதங்களுக்கு இடையேயான கலப்புத் திருமணத்தை தடுக்க, மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை" எனத் தெரிவித்துள்ளது.