எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசுகளை ஆட்சி செய்ய விடாமல் கவிழ்க்கும் சித்து விளையாட்டுகளை காலந்தோறும் அரங்கேற்றி வருகிறது. இப்போது மகாராஷ்டிராவில் அரங்கேற்றி இருக்கும் இதே ஆட்சி கவிழ்ப்பு பார்முலாவைத்தான் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது.
Recommended Video
நாடு விடுதலைக்குப் பின்னர் காங்கிரஸ் மத்தியில் இருந்த போது, மாநில அரசுகளை 356-வது பிரிவின் கீழ் கலைத்து கலைத்து விளையாடுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது. இதனால் 356-வது பிரிவின் கீழ் ஆட்சிகளைக் கலைப்பது கைவிடப்பட்டது.

மகாராஷ்டிரா கவிழ்ப்பு
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை போர்க்கொடி தூக்க வைப்பது; பதவிகளை ராஜினாமா செய்ய வைப்பது; சட்டசபை பலத்தைக் குறைத்து ஆளும் அரசை கவிழ்ப்பது; புதிய ஆட்சி அமைப்பது என்கிற ஒரே பார்முலாவை இடைவிடாமல் பின்பற்றுகிறது பாஜக. இதனையே மகாராஷ்டிராவிலும் அமல்படுத்தி ஆட்சியை கவிழ்த்துள்ளது பாஜக.

கர்நாடகா கவிழ்ப்பு
கர்நாடகா சட்டசபைக்கு 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ரது. இம்மாநிலத்தில் மொத்தம் 222 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113. 2018 சட்டசபை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்: பாஜக -104 காங்கிரஸ்- 78 ஜேடிஎஸ்- 37 இதனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வராக 56 மணிநேரம்தான் பதவி வகித்தார். இதனையடுத்து காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் 12; ஜேடிஎஸ் கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் பாஜக ஆதரவுடன் போர்க்கொடி தூக்கினர். தங்களது எம்.எல்.ஏ பதவிகளையும் ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 101 ஆக குறைந்தது. பாஜகவின் பலம் 105 ஆக இருந்தது. அப்போதும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக முதல்வராக இருந்த குமாரசாமி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

கமல்நாத் அரசு கவிழ்ப்பு
மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் 231 எம்.எல்.ஏக்கள். காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். (காங்கிரஸ் 113, பகுஜன் சமாஜ் 2; சமாஜ்வாதி 1; சுயேட்சை 4). இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116 எம்.எல்.ஏக்கள். வழக்கம் போல பாஜக பார்முலாவின் படி 22 ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. 22 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் காங்கிரஸ் அணி பலம் 98; பாஜக 109; அப்போது பெரும்பான்மைக்கு 107 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. அதனால் முதல்வராக இருந்த கமல்நாத் ராஜினாமா செய்தார். பின்னர் பாஜக ஆட்சியை அமைத்தது.

சிக்கிம், புதுச்சேரி
பெரிய மாநிலங்கள்தான் என்று இல்லை.. சிக்கிம், புதுச்சேரி ஆகிய சிறு மாநிலங்களிலும் பாஜக தன் அரசியல் சித்துவிளையாட்டி இப்படித்தான் அரங்கேற்றியது. சிக்கிம் மாநில தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லாத பாஜக, சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் 10 பேரை அப்படியே வளைத்துப் போட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. புதுச்சேரியில் 2021-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவடையும் நிலையில் பாஜகவின் அரசியல் விளையாட்டு அரங்கேறியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்து முதல்வர் நாராயணசாமி அரசாங்கத்தைக் கவிழ்த்தது பாஜக. இந்த வரிசையில்தான் இப்போது மகாராஷ்டிராவிலும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை போர்க்கொடி தூக்க வைத்து ஆட்சியை கவிழ்த்துவிட்டிருக்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications