ஒரே பைக்கில் ரிஸ்க் பயணம்.. "போலீசில் சிக்குனா, அபராதம் கட்ட லோன் தான் எடுக்கனும்" நெட்டிசன்கள் ஷாக்
டெல்லி: ஒரே பைக்கில் 6 பேர் பயணம் செய்ததோடு 2 கோழிகள் மற்றும் 2 நாய்களுடன் ஒருவர் ஆபத்தான வகையில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் மட்டும் போலீசில் சிக்கினால்.. போலீசார் விதிக்கும் அபராதத்தை கட்ட வங்கியில் லோன் தான் எடுக்க வேண்டும் என்று விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு ஆட்டோவில் இத்தனை பேரா? என்று பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும்படி 10 பேர் அல்லது 20 பேர் பயணம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதை பார்த்திருப்போம்.
ஆனால், இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு காட்சி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

ஆபத்தை உணராத பயணம்
பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கி செல்வது, ரயில் சென்ற பிறகு ஓடிச்சென்று ஏறுவது என கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தான செயல்களில் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஈடுபடுவது குறித்த செய்திகளையும் அது தொடர்பான வீடியோக்களையும் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். அதேபோல ஆட்டோக்களில் 15-20 பேரை ஏற்றிக்கொண்டு செல்வது இருசக்கர வாகனத்தில் 4 பேருடன் செல்வது என ஆபத்தை உணராமல் அவ்வப்போது சில வாகன ஓட்டிகள் செல்வதையும் சாலைகளில் காண முடியும்.

2 நாய்கள், 2 கோழிகளும்
அந்த வகையில், கடந்த சில தினங்களாக இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. 15 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் பைக்கில் கணவன் - மனைவி, பிள்ளைகள் என 6 பேர் பயணம் செய்கின்றனர். அதோடு வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்கள், 2 கோழிகளும் பைக்கில் ஏற்றி வைக்கப்படுள்ளன. 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்ட பைக்கில் 6 பேர் மற்றும் செல்லப்பிராணிகளுடன் ஒருவர் ஓட்டிச்செல்வது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.

போலீசில் சிக்கினால் வங்கியில் லோன் தான்
இந்த வீடியோவை பார்க்கும் போது அவர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு செல்வது போல இருக்கிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் நெட்டிசன் ஒருவர், இவர் மட்டும் போலீசிடம் சிக்கினா, அபராதம் கட்ட வங்கியில் லோன் தான் எடுக்க வேண்டும் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வாயில்லா ஜீவன்களை கூட
லட்சக்கணக்கான நெட்டிசன்கள் இதை பார்த்து இருக்கின்றனர். நெட்டிசன்கள் பலரும், இதுபோல பயணிப்பது ஆபத்து என்று அறியாமல் தனது குடும்பத்துடன் இப்படி செல்கிறாரே.. என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர். சில நெட்டிசன்கள் வாயில்லா ஜீவன்களை கூட ஆபத்தை நோக்கி அழைத்து செல்கிறார் என்று சாடியுள்ளனர். அதேபோல், சில நெட்டிசன்கள், இத்தனை பேருடன் பைக்கை மிகச்சாதாரணமாக ஓட்டிச்செல்கிறாரே என்று வியக்கும் வகையிலும் பதிவிட்டு வருகின்றனர்.

அபராதத்திற்கு உரிய குற்ற செயல்
இன்னும் சிலரோ, இது கடுமையான போக்குவரத்து விதி மீறல்.. இந்த வாகன ஓட்டி தன்னுடன் வருபவர்களுக்கு மட்டும் இன்றி சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.. அபராதத்திற்கு உரிய குற்ற செயல்" என்றும் சாடியிருக்கின்றனர். போலீசார் உரிய அபராதம் விதிக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரங்களும் தெரியவரவில்லை.












Click it and Unblock the Notifications