விவாகரத்து வழக்கு.. ஆர்ட்டிக்கிள் 142யை உச்சநீதிமன்றம் பயன்படுத்த முடியுமா? செப்., 28ல் விசாரணை
டெல்லி: திருமண விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து செப்டம்பர் மாதம் 28 ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முடிவு செய்துள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் வரும் 28 ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
இந்த அமர்வில் எஸ்கே கவுல் தலைமையில் சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் நீதிபதிகளாக விசாரணை நடத்த உள்ளனர்.
“முஸ்லிம்” மாப்பிள்ளை.. “இந்து” மணப்பெண் - டிரெண்டாகும் அமீர், பாவ்னி “திருமண” ஆல்பம் பாடல் வீடியோ
விவாகரத்து கோரும் வழக்கு
இந்தியாவில் திருமணம் செய்து கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இருப்பினும் சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதோடு, விவாகரத்து கோருகின்றனர். இந்த வழக்கை நீதிமன்றங்கள் விசாரித்து சரியான காரணங்கள், இருதரப்பினரின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகிறது. இத்தகைய விவாகரத்து என்பது இந்து தம்பதி என்றால் இந்து திருமண சட்டம் 1995, 13 பி பிரிவை பயன்படுத்தி விவாகரத்து வழங்கப்படும்.
உச்சநீதிமன்ற அரசியல் அமர்வு
இந்நிலையில் தான் சில வழக்குகளில் ஒருவர் விவாகரத்து கோரும் பட்சத்தில் கணவன் அல்லது மனைவி ஆகியோரில் ஒருவர் சம்மதம் தெரிவிப்பது இல்லை. இதனால் அவர்களுக்கு விவாகரத்து வழங்குவதில் பிரச்சனை உள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2 கேள்விகள்
2016 ஜூன் மாதம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு கேள்விகளுடன் அரசியலமைப்பு அமர்வுக்கு பரிந்துரைத்தது. அதில், முதல் கேள்வி என்பது ‛‛இந்து திருமண சட்டம் தொடர்பான விவாகரத்து வழக்கில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142வது பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை என்பது எந்த அளவுக்கு உள்ளது?" என கேட்டு இருந்தது. 2வது கேள்வி ‛‛அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 142ன் கீழ் அத்தகைய அதிகார வரம்பை செயல்படுத்தவே கூடாதா அல்லது அத்தகைய நடைமுறையை ஒவ்வொரு வழக்கின் உண்மைகளிலும் தீர்மானிக்க வேண்டுமா'' என கேள்வி கேட்டு இருந்தது.
செப்டம்பர் 28 ல் விசாரணை
இந்திய அரசியலமைப்பு சட்டம் 142 என்பது உச்ச நீதிமன்றத்துக்கு சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதாவது, ஒரு வழக்கில் அல்லது விவகாரத்தில் முழுமையான தீர்ப்பை உறுதி செய்வதற்காக சட்ட விதிகளுக்கு அப்பால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்த விதி அதிகாரம் அளித்துள்ளது. இதனை தான் உச்சநீதிமன்றத்தின் அரசியல் அமர்வு நீதிபதி எஸ்கே கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு செப்டம்பர் 28ம் தேதி ஆய்வு செய்து விசாரணையை துவங்க உள்ளது. மேலும் இதுதொடர்பான விபரங்களை அளிக்க அமிகஸ் கியூரி அமைப்பின் மூத்த வழக்கறிஞர் வி கிரியிடம் நீதிமன்றம் கேட்டுள்ளது.