100 நாட்களில் 46 பொதுத்துறை நிறுவனங்கள் 'குளோஸ்' அல்லது தனியாருக்கு தாரைவார்ப்பு!
Recommended Video
டெல்லி: 100 நாட்களில் 46 பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் அல்லது தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற போது 60 ஆண்டுகாலமாக செயல்பட்டு வந்த திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் ஆணையம் நிதி ஆயோக். இதுவே நாட்டுக்கான செயல் திட்டங்களை வகுத்து பிரதமருக்கு தரக் கூடியது. இதன் துணைத் தலைவர் ராஜீவ் குமார், புதிய சீர்திருத்தங்கள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார்.
பிரதமர் மோடி பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அடுத்த 100 நாட்களில் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகளை ராஜீவ்குமார் விவரித்துள்ளார். அவரது பெட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடியின் 2-வது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்களில் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம், தனியார் மயமாக்கல், தொழிற்வளர்ச்சிக்காக நில வங்கிகள் அமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகளால் அன்னிய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைவர். புதிய தொழிலாளர் நலச் சட்டமான ஜூலையில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
மொத்தம் 44 தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சட்டங்கள் இருக்கும். நில வங்கிகள் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் தொழில்நிறுவனங்கள் அமைக்க நிலம் எளிதாக கிடைக்கும்.
46 பொதுத்துறை நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தப்படும். அவை மூடப்படும் அல்லது தனியாருக்கு தாரை வார்க்கப்படும். அதேபோல் ஏர் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான தடைகளும் நீக்கப்படும்.
இவ்வாறு ராஜீவ் குமார் கூறியுள்ளார்.
வேலை இல்லா திண்டாட்டம்
மோடியின் கடந்த ஆட்சியில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் சிறு குறு தொழில்கள் ஒழித்து கட்டப்பட்டன. பல கோடி பேர் வேலை இழந்து நடுத்தெருவில் நின்றனர்.
தற்போது 46 பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடுவது அல்லது தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற முடிவால் வேலை இழப்ப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இது சமூகத்தில் பெரும் பதற்ற சூழ்நிலையை உருவாக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.