மின்தடை: யாரை குறை சொல்லப்போறீங்க... நேருவையா? மாநில அரசையா? - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: நாடு முழுவதும் ஏற்பட்டு உள்ள நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு மோடி அரசை குறை சொல்ல வேண்டாம் என்றும், இதற்கும் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியே காரணம் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மின் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி சொல்லும் போது மத்திய நிதியமைச்சகம் சங்கடப்படுத்தலாமா? ப.சிதம்பரம் கிண்டல்
சமாளித்த தமிழ்நாடு
தொடக்கத்தில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு காரணமாக மின் தடை அதிகம் ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு மின்சாரத்துறை மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக 2, 3 நாட்களில் மின் பிரச்சனை ஓரளவு சீரான நிலைக்கு வந்தது. இந்தியாவில் 70% மின் உற்பத்தி நிலக்கரி மூலமாகவே நடைபெறுகிறது. தற்போது போதிய நிலக்கரி இல்லாத காரணத்தால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் ரயில்கள் ரத்து
மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வேகமாக கொண்டு செல்லும் வகையில் மே மாதம் 3வது வாரம் வரை மொத்தம் 657 பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை தங்கு தடையின்றி கொண்டு செல்வதற்கு வசதியாக சரக்கு ரயில்களை வேகமாக இயக்க தற்காலிகமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
மோடி அல்ல, காங்கிரஸ்தான் காரணம்
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். "அளவுக்கு அதிகமான நிலக்கரி, மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் இருந்தும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அனல் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதற்கும் மோடி அரசை நாம் குறை சொல்லிவிடக்கூடாது. இதற்கு காரணம் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிதான்.
இதுதான் உங்கள் அறிய கண்டுபிடிப்பா?
மின்சாரத்துறை, ரயில்வே துறை, நிலக்கரி துறைகளின் திறமையின்மை இதற்கு காரணம் இல்லை. இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அந்தந்த துறைகளுக்கு கடந்த காலங்களில் தலைமை வகித்த காங்கிரஸ் அமைச்சர்கள் மீதுதான். பயணிகள் ரயில்களை நிறுத்தி நிலக்கரி ரயில்களை இயக்குவதே இந்த அரசு கண்டறிந்துள்ள சரியான தீர்வு. மோடி ஹை ஹே! மும்கின் ஹே!" என குறிப்பிட்டு உள்ளார்.
ராகுல் காந்தி கண்டனம்
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி முன்பு அளித்த வாக்குறுதிகள், தற்போதைய மின் தடை செய்திகளை தொகுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "பிரதமரின் வாக்குறுதிகளுக்கும் நோக்கத்திற்கும் இடையே இருக்கும் வயர் எப்போதும் அறுந்துகொண்டே இருக்கிறது. பிரதமரே! மின் நெருக்கடி விவகாரத்தில் நீங்கள் அடைந்த தோல்விக்கு யாரை குறை சொல்வீர்கள்? நேருவையா? மாநில அரசுகளையா? அல்லது மக்களையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.