பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு.. ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை
டெல்லி: ‛‛அனைத்து திருடர்களின் பெயர்களிலும் மோடி உள்ளது'' என காங்கிரஸ் கட்சியின் எம்பியான ராகுல்காந்தி பேசியதற்கு எதிராக பாஜக எம்பி சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி. இவர் தற்போது எம்பியாக உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடியையும் கடும் வார்த்தைகளால் மறைமுகமாக தாக்கி பேசினார். ராகுல்காந்தி பேசியதாவது:

திருடர்கள் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வங்கிகளில் வரிசையில் நிற்கின்றனர். வங்கிகளில் இருந்து தங்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கு திருடர்கள் கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் குழுவாக உள்ளனர். அவர்கள் விவசாயிகள், ஏழைகள், சிறு வியாபாரிகளிடம் இருந்து பணத்தை பிடுங்கி 15 நண்பர்களுக்கு வழங்குகிறார்கள்.

மோடி என்ற பெயரில்...
நீங்கள்(பொதுமக்கள்) வங்கிகள் முன்பு வரிசையில் நின்றபோது நீரவ் மோடி வங்கியில் கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடிவிட்டார். நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் லலித் மோடியை தவிர மோசடி செய்தவர்களின் பட்டியல் அதிகமாக உள்ளது. இப்போது ஒரு சிறு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஏன் அனைத்து திருடர்களும் மோடி என பெயர் கொண்டுள்ளனர்?. நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி, இன்னும் அதிகமாக தேடினால் இன்னும் சில மோடிகள் கிடைப்பார்கள்" எனக்கூறினார்.

ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு
இந்த பேச்சுக்கு அப்போது பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு மோடி என பெயர் கொண்ட அனைவரையும் புண்படுத்தும் வகையில் உள்ளது என பீகார் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய ராஜ்யசபா பாஜக எம்பியுமான சுஷில் குமார் மோடி கூறினார். இந்நிலையில் அவர் ராகுல்காந்திக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சுஷில் குமார் மோடி தரப்பில் மூத்த வழக்கறிஞரும் பீகாரின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான எஸ்டி சஞ்சய் ஆஜரானார். சஞ்சீவ் சவுராசியா, சாலை கட்டுமானத்துறை அமைச்சர் நிதின் நபி, பீகார் பாஜக தலைவர் மணீஷ் குமார் ஆகியோர் சாட்சியாக ஆஜராகினர். இதில் சஞ்சீவ் சவுராசியாவிடம் மட்டும் சாட்சி பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications