தாலிபான்களை அங்கீகரிக்குமா இந்தியா? ரஷ்யாவில் இன்று நடைபெறும் முக்கிய மீட்டிங்.. ஏன் முக்கியம்
டெல்லி: ஆப்கனில் அமைதியான சூழலை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யாவில் இன்று (அக். 20) நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கேற்கிறது. தாலிபான்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெறும் 2ஆவது பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஆப்கனில் வெறும் சில மாதங்களில் அனைத்தும் மாறிவிட்டது. அமெரிக்கா இருக்கும் வரை ஆட்சியில் இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசு இப்போது ஆப்கனில் ஆட்சியில் இல்லை..
வெறும் சில வாரங்களில் தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பெரும்பாலான இடங்களில் தாலிபான்களுக்கு மக்கள் ஆதரவு இருந்ததாலேயே இவ்வளவு விரைவாக அவர்களால் ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்ற முடிந்துள்ளது.
வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த சூப்பர் பிளான்.. அனைத்து மாவட்டங்களிலும் களமிறக்கப்படும் அமைச்சர்கள்
தாலிபான் ஆட்சி
தாலிபான்களைத் தலைமையிலான ஆப்கன் அரசு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதேநேரம் சீனா, பாகிஸ்தான் போன்ற பெரும்பாலான அண்டை நாடுகள் தாலிபான் தலைமையை அங்கீகரித்துவிட்டன. அஸ்ரப் கானி அரசுடன் இந்தியா நெருக்கம் காட்டி வந்ததால், இப்போது தாலிபான்கள் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என இந்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே, எல்லையில் சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் பிரச்சினை இருப்பதால் ஆப்கனுடன் சுமுகமாகச் செல்லவே இந்தியா விரும்புகிறது.
இந்தியா பங்கேற்பு
இந்தச் சூழலில் ஆப்கனில் அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் ரஷ்யா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இந்தச் சூழலில் பல்வேறு ஆப்கன் நிலை குறித்து விவாதிக்க நாடுகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ரஷ்யா ஏற்பாடு செய்துள்ளது. ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இன்று (அக். 20) இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யா விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கேற்கவுள்ளது.
முக்கிய ஆலோசனை
இதில் ஆப்கனின் தற்போதைய நிலை குறித்தும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது. தாலிபான் ஆட்சியில் மனித உரிமைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஆப்கன் உடனான இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று கடைசி நேரத்தில் அமெரிக்கா அறிவித்துள்ளது.
Recommended Video
2ஆவது மீட்டிங்
ஆப்கனில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் மாஸ்கோ ஃபார்மேட் இதுவாகும். அதேபோல இந்தியாவுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நடைபெறும் 2ஆவது பேச்சுவார்த்தை இதுவாகும். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தாலிபான் பிரதிநிதி கத்தாருக்கான இந்தியத் தூதர் தீபக் மிட்டலை தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சந்தித்துப் பேசினார். அது அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்ற சந்திப்பாகும். அதாவது இன்று தான் தாலிபான்கள் உடன் இந்தியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அமைச்சர்
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், "தாலிபான்களை ரஷ்யா இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஆப்கனில் நிலைமையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் எனத் தாலிபான்கள் முதலில் உறுதி அளிக்க வேண்டும். குறிப்பாக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்கத் தாலிபான்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.