முல்லை பெரியாறு: புதிய அணை கட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு!
டெல்லி: முல்லை பெரியாறு அணைக்கு அருகே புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசுக்கு உரிய உத்தரவிடக் கோரி கேரளாவை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இல்லாவிட்டால் புதிய அணையை கட்டும்வரை முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேரளாவை சேர்ந்த 6 பேர் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரள அரசோ முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்பதால் அந்த அணையில் 139 அடி நீரை தேக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த அணை 126 ஆண்டுகள் பழமையானது. எனவே இந்த அணையின் சில விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய அணையை கட்ட வேண்டும் என கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சமூகவலைதளங்களில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

சமூகவலைதளங்கள்
இதையடுத்து #SaveMullaiperiyardam என்ற ஹேஷ்டேக் வைரலானது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனால் #AnnexeIdukki #AnnexeIdukkiwithTN என்ற ஹேஷ்டேக்குகள் டிரென்டாகின.

எதிர்ப்பு
இதையடுத்து புதிய அணை கட்டுவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழகத்தின் அனுமதியின்றி அணைக் கட்டக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து கேரளா அரசும் மனு தாக்கல் செய்தது. இப்படியாக கேரளாவும் தமிழக அரசும் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அணையின் வரலாறு
இந்த நிலையில் கேரளாவில் முல்லை பெரியாறு அணை அருகே உள்ள அஜய் ஜோஸ் உள்ளிட்ட உள்ளூர் மக்கள் 6 பேர், வழக்கறிஞர் மஞ்சு ஜேட்லி சர்மா மூலம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் முல்லை பெரியாறு அணை 100 ஆண்டுகள் பழமையானது. இது 53.6 மீட்டர் உயரம் உள்ளது. இந்த ஆணை 1895 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது. முதலில் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்ட இந்த அணை பின்னர் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டது.

பேரிடர் பாதிப்பு அதிகம்
நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. ஏற்கெனவே 1979 இல் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் அணையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருந்தது. அது போல் 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அணையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய கட்டுமானத்துடன் ஒப்பிடுகையில் அந்த காலகட்டத்தில் அணை கட்ட பயன்படுத்தப்பட்ட கட்டுமான பொருட்கள் காலாவதியானதாக கருதப்படுகிறது. இதனால் அணையிலிருந்து கசிவும் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பரிசீலனை
எனவே அணையை இடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அணையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் இடுக்கி, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 30 முதல் 40 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்தும். எனவே புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் அல்லது வைகை அணையின் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க வேண்டும் அல்லது கூடுதல் அணைகளை கட்ட வேண்டும் அல்லது முல்லை பெரியாறு அணையிலிருந்து வேறு நீர்த் தேக்கங்களுக்கு நீரை தேக்கி வைக்க வேண்டும் அல்லது புதிய அணையை கட்டும் வரையில் முல்லை பெரியாறு அணையை வலுப்படுத்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அணையின் வயது குறித்தும் அது குறித்த விரிவான அறிக்கைகளையும் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications