அடிக்கடி உருமாறும் கொரோனா வைரஸ்.. புரோட்டீன் மியூட்டேஷனால் குழப்பம்.. வாக்சின் வருவது தாமதமாகும்!
டெல்லி: கொரோனா வைரஸ் அடிக்கடி தன்னைத் தானே உருமாற்றம் செய்து கொள்வதால், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது என்ற கருத்து தற்போது வலுத்துள்ளது.
உலகம்முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக பாதிக்கும் என்ற கருத்தை பெரும்பாலான நாட்டின் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஹாங்காங் நாட்டில் ஒருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொரோனா வைரஸ் புரோட்டீன் உருமாற்றமும் சாத்தியமாகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா; 96 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் 6,031
கொரோனா வைரஸ் பாகம்
கொரோனா வைரஸின் மேல்பகுதியில் இருக்கும் முள் போன்ற அமைப்புதான் புரோட்டீனால் ஆனது. அதன் உள்பகுதி கொழுப்பால் ஆனது. ஆதலால்தான் நமது கைப்பகுதியில் வைரஸ் ஒட்டிக் கொண்டால் சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது. சோப்பால் கழுவும்போது அதில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் தன்மை வைரஸின் மேல் பகுதியில் இருக்கும் முள் போன்ற புரோட்டீன் பகுதியை சிதைத்து கொழுப்பை கரைக்கிறது. இந்த முறையில் வைரஸ் நமது கையில் இருந்து கொல்லப்படுகிறது.
பெருகும் வைரஸ்
கொரோனா வைரஸ் அதன் மேல் பகுதியில் இருக்கும் முள் மூலம்தான் நமது உடலுக்குள் நுழைகிறது. நுழைந்த பின்னர் வைரஸ் பல மடங்கு உடலுக்குள் பெருகத் துவங்கி விடுகிறது. இதுதான் தொற்று நோயாக மாறுகிறது. இந்த தகவல்கள் ஆய்வக மருத்துவர்கள் இதழில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுக்கு 1,325 மரபணுக்களில் இருந்து எடுக்கப்பட்ட 1,604 கொரோனா வைரஸில் இருக்கும் முள் போன்ற புரோட்டீன்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
வைரஸ் உருமாற்றம்
இந்த ஆய்வுகள் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் மருத்துவர் சர்மான் சிங், ''இந்த புரோட்டீன்களில் 12 முறை வைரஸ் உருமாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் ஆறு வைரஸ் உருமாற்றம் புதியவை. இதில் ஒன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தனக்குத் தானே மரபணுக்களை மாற்றிக் கொள்ளும். இந்த வைரஸ் எந்தளவிற்கு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை.
வைரஸ் பரவல்
சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வைரஸ் தன்னைத் தானே உருமாற்றம் செய்து கொள்ளும். ஆனால், இந்த வகையான மாற்றம் மிகவும் விரைவாக நடந்து வருகிறது. எந்தளவிற்கு இது வைரஸை பரப்பும் என்பது குறித்து தெரியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பு மருந்துக்கு சவால்
இந்த ஆய்வில் ஈடுபட்டு இருந்த கனடாவைச் சேர்ந்த மற்றொரு தொற்று நோய் மருத்துவர் கூறுகையில், ''கொரோனா தடுப்பு ஊசிக்கு முக்கியமே புரோட்டீன்தான். ஆனால், இதில்தான் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக உலக அளவில் இருந்து கிடைக்கும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு குறுகிய காலத்திற்குள் பல்வேறு உருமாற்றங்கள் அல்லது பிறழ்வுகள் தோன்றுவது புரோட்டீன் கட்டமைப்பில் இணக்கமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இதுதான் தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு சவாலாக இருந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
குறையும் எதிர்ப்பு சக்தி
இந்த புரோட்டீன் உருமாற்றத்தால் உடலிலும் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த உருமாற்றத்தால் பாதிக்கப்படும் ஒருவருக்கு குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்திதான் உடலில் உருவாகும். அல்லது நோய் எதிர்ப்பு சக்தியே உருவாகாமல் போகலாம்.
அறிகுறி இருக்குமா
இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி நோய் தொற்று ஆய்வாளர் ஒருவர், ''ஹாங்காங்கில் ஏற்பட்டபோது போல் மீண்டும் வைரஸ் உருமாற்றம் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் அறிகுறிகள் குறைந்த அளவிலேயே காணப்படும். ஏனென்றால், முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றில் இருந்து ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி பின்னர் ஏற்படும் தொற்றில் இருந்து பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி இருக்கும். இன்னும் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் வைரஸ்
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று பரவல் குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சமூக இடைவெளி பின்பற்றுவது குறைந்தது. பொருளாதாரத்திற்கு என்று நகரங்களை திறந்துவிட்டது ஆகிய இரண்டு காரணங்களாலும் தொற்று அதிகரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் வுகானில் தோன்றிய வைரஸில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் தோன்றி இருந்த வைரஸூம் இந்தியாவில் காணப்பட்டன.