நீட் தேர்வு - மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ்-உடன் நுழைவுச் சீட்டு... மத்திய அமைச்சர் விரிவான விளக்கம்
டெல்லி: நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா இ-பாஸ் உடன் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
லோக்சபாவில் திமுக எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த விரிவான பதில்:
நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. நீட் (முதுநிலை மற்றும் நீட் (இளநிலை) 2021 தேர்வுகள் 2021 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இந்த தேர்வுகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொவிட் நெறிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்படும். மேலும், தேர்வை பாதுகாப்பாக நடத்த தேர்வு எழுதுவோர் மற்றும் நடத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.

கொரோனா வழிகாட்டுதல்கள்
கூட்டம் மற்றும் நீண்ட பயணத்தை தவிர்க்க நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொவிட் இ-பாஸ்-உடன், நுழைவுச் சீட்டு வழங்கப்படுகின்றன. தேர்வு மையங்களுக்குள் விண்ணப்பதாரர்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும். நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு, இதற்காக அமைக்கப்படும் தனிமை மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

பாதுகாப்பு உபகரணங்கள்
விண்ணப்பதாரர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, முக தடுப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். தேர்வு மையத்துக்கு வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரூ.15,000 கோடி நிதி உதவி
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றன. கொவிட்-19 அவசரகால மீட்பு மற்றும் சுகாதார தயார்நிலை நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.15,000 கோடிக்கு மத்திய அமைச்சரவை 2020ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் 2020-21ம் நிதியாண்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேசிய சுகாதார திட்டம் மூலமாக ரூ.8257.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு தொகை ரூ.110.60 கோடியும் அடங்கியுள்ளது.

தேசிய கொள்கை
மேலும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி போட, செயல்பாட்டு தொகையும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டன. அரியவகை நோய்களுக்கான தேசிய கொள்கை இறுதி செய்யப்பட்டு பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தடுப்பு யுக்தி அடிப்படையில் அரியவகை நோய்களை குறைப்பதை இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது.

அரியவகை நோய் சிகிச்சைக்கு நிதி உதவி
தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ், அரியவகை நோய்களுக்கான சிகிச்சைக்கு மத்திய அரசு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, இந்த நிதியுதவியில் கட்டுப்பாடு இல்லை. பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications