பணம் படைத்தவர்களுக்கான தேர்வு ‘நீட்’.. வியாபாரம் ஆக்கிவிட்டார்கள்! ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு
டெல்லி: நீட் தேர்வை ஏழைகளுக்காக கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். தற்போது பணம் படைத்தவர்களுக்கு என்று ஆகிவிட்டது. நீட் தேர்வை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். நீட் குறித்து விவாதம் நடத்த கோரினால் அதனை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஜனாதிபதி உரையில் கூட நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நீட் நுழைவுத்தேர்வில் இந்த ஆண்டு ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறின. வினாத்தாள் கசிவு தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
நீட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று எதிரொலித்தது. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், லோக்சபாவில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் பிரச்சினையை கையில் எடுத்தார்.
சட்டென விட்ட வார்த்தை.. ராகுல் காந்தியின் பேச்சு அபாண்டம்.. ஆவேசமான அமித்ஷா.. லோக்சபாவில் பரபரப்பு
ராகுல் காந்தி பேசுகையில், ஏழைகள் மருத்துவர்கள் ஆகுவார்கள் என்று கூறி நீட் தேர்வை கொண்டு வந்தீர்கள். ஆனால் இன்று நீட் தேர்வு வியாபாரமாகிவிட்டது. பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை ஏற்பட்டது. நீட் தேர்வு ஆரம்பித்து 7 ஆண்டுகள் தான் ஆகின்றது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு எனும் தொழிற்கல்வியை வியாபார கல்வியாக மாற்றிவிட்டார்கள்.
நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு பணம் படைத்தவர்களுக்கான தேர்வாக மாறிவிட்டது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த கோரினால் மத்திய அரசு மறுக்கிறது. ஜனாதிபதி உரையில் கூட நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தி பேசுகையில், பாஜக எம்பிக்கள் முழக்கமிட்டனர். வாழ்க அரசியல் சாசனம், பாரத் மாதா கி ஜே என பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். மேலும், ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி உரையாற்றினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை.. அகிம்சைக்கானது என்றும் ராகுல் கூறினார். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும் வெறுப்பை பரப்புவர்கள் எனவும் ராகுல் காந்தி பேசினார். இதற்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பரபரப்பு தொற்றியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், இன்று லோக்சபாவில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications