புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வெப்பநிலை உயர வாய்ப்பில்ல ராஜா - இந்திய வானிலை மையம் குட் நியூஸ்
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயராது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
டெல்லி: வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயராது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இடியுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மே 6 ஆம் தேதிக்கு பிறகு மேலும் தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலம் பாந்தாவில் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
தீவிர வெப்பமானது வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ, தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் என்றும், அதற்கு பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ந் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த திசையை நோக்கி நகரும் என்ற தகவல் தற்போதுள்ள நிலையில் தெரிவிக்கப்படவில்லை. தாழ்வுநிலை உருவானால் மட்டுமே எப்படி நகரும் என்பதற்கான தகவல் தெரிவிக்கப்படும். இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயல் எச்சரிக்கையாக மாறுமா? என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயராது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடமேற்கு இந்தியாவில் இடியுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அங்கு வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம்,தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர வெப்பநிலை தமிழகத்தில் தொடரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.