இந்தியாவிலும் இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவையா? லோக்சபாவில் மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இந்தியாவில் இளைஞர்கள், ஆயுதப் படைகள் கட்டாயம் சேர வேண்டும் என்று மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் வகுக்கவில்லை என மத்திய அமைச்சர் அஜய் பட் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுவதும் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதும் தொடர் நிகழ்வாகி இருகிறது.

இத்தகைய அமளிகளுக்கு நடுவே லோக்சபாவில் அருண் குமார் சாகர் மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
ஆயுதப்படைகளில் இளைஞர்கள் கட்டாயம் சேருவதற்காக அரசாங்கம் எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. சைனிக் பள்ளிகள், அக்னிபத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபத்தப்படவில்லை. அரசுசாரா நிறுவனங்களும், தனியார் பள்ளிகளும் மாநில அரசுகளுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலம்/ யூனியப் பிரதேசங்களின் பள்ளிகளுக்கும் பொருந்தும். தகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பித்த அரசுசாரா, தனியார் மற்றும் மாநில அரசுப் பள்ளிகளின் விண்ணப்பங்களுக்கு சைனி்க் பள்ளிகள் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆயுதப்படைப் பிரிவினர் செய்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் அஜய் பட் கூறினார்.











Click it and Unblock the Notifications