நிர்பயா வழக்கு.. கைதி, கயிறு, எல்லாம் ரெடி.. தூக்கில் போடத்தான் ஆள் இல்லை.. சிக்கலில் திகார் சிறை
டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு கயிறு நெருங்கும் நிலையில் அதை நிறைவேற்ற திகார் சிறையில் ஹேங்க்மேன் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து வினய் சர்மா, முகேஷ், பவன், அக்ஷய், ராம்சிங், ஒரு சிறுவர் உள்பட 6 பேரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே மிகவும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கு விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
திகார் சிறை
இந்த 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
கருணை மனுக்கள்
இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் 4 பேரின் தூக்கும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி துணை நிலை ஆளுநருக்கு தங்களது கருணை மனுக்களை அனுப்பினர்.
தள்ளுபடி
கடுங்குற்றம் செய்த இந்த 4 பேருக்கும் கருணை அளிக்கக் கூடாது என துணை நிலை ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதையடுத்து 4 பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஹேங்க்மேன்
இதனால் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு தூக்குத் தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கான தண்டனை நிறைவேற்ற திகார் சிறையில் ஹேங்க்மேன் இல்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தண்டனை
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கொலையாளி அப்சல் குருவை தூக்கிலிடுவதற்கே ஹேங்க்மேன் இல்லை. இதனால் கடைசி நிமிடத்தில் சிறை அதிகாரி ஒருவர் தூக்கு மேடை லிவரை இழுக்க சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஹேங்க்மேன்
தற்போது இந்த நால்வருக்குமான தண்டனை நிவர்த்தி செய்ய மற்ற சிறைச்சாலைகளில் ஹேங்க்மேனை திகார் சிறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து திகார் சிறையில் ஹேங்க்மேனாக இருந்தவர் குறித்த தகவல்களை அங்கிருக்கும் கிராமங்களில் விசாரித்து வருகின்றனர்.
சிறைத் துறை
எனினும் தூக்கு தண்டனை என்பது அரிதாக நிகழ்த்தப்படுவதாகும். எனவே இதற்காக நிரந்த ஹேங்க்மேனை சிறை நிர்வாகம் நியமிக்காது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவதற்கு யாரையாவது ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்க உத்தேசித்து வருகிறது. மேலும் முழு நேர ஹேங்க்மேனை நியமிப்பதற்கான பணி விவரங்களை கண்டுபிடிப்பது கடினமாகும் என சிறை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.