என்.ஆர்.சி... அமித்ஷா கருத்துக்கு பிரதமர் மோடி மறுப்பு- நாடு முழுவதும் அமல் இல்லை!
டெல்லி: நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை (என்.ஆர்.சி) செயல்படுத்தப்போவது இல்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை செயல்படுத்தப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையும் அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்.ஆர்.சியை ஏற்க முடியாது என மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் என்.ஆர்.சியை நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவே இல்லை. அஸ்ஸாமில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால்தான் செயல்படுத்தினோம் என கூறியுள்ளார்.
மேலும் என்.ஆர்.சி.யை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ ஆலோசிக்கப்படவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடியின் இக்கருத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுவரை தெரிவித்த கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிப்பதாக உள்ளது.
சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் அடையாளம் காண்போம்; இதற்காகவே நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என அமித்ஷா கூறியிருந்தார். லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது கூட, நாடு முழுவதும் என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக அமித்ஷா கூறியிருந்தார்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலின் போதும் அமித்ஷா இதனை வலியுறுத்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.