'தாலிபான்கள் பயங்கரவாதிகளா இல்லையா? மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்..' உமர் அப்துல்லா கேள்வி
டெல்லி: தாலிபான்களுடன் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், தாலிபான்கள் பயங்கரவாதிகளைக் கருத வேண்டுமா இல்லையா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறத் தொடங்கியதுமே தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிய தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். வெறும் ஒரு சில வாரங்களில் ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்,
நேற்று, ஆகஸ்ட் 31ஆம் தேதி, ஆப்கனில் இருந்த கடைசி அமெரிக்கப் படை வீரரும் அங்கிருந்து வெளியேறினார். இதைத் தாலிபான்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மறுபுறம் ஆட்சி அமைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகள்
இந்தச் சூழலில் உலகின் பல்வேறு நாடுகளும் தாலிபான்களை அங்கீரப்பது குறித்து முடிவுகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகவும் ஆப்கனை மீண்டும் கட்டமைக்க உதவ உள்ளதாகவும் அறிவித்துள்ளன. அதேநேரம் தாலிபான்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர்.

இந்தியா நிலைப்பாடு
அதேநேரம் முன்பு ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி அரசுடன் இந்தியா நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. எனவே, தாலிபான்கள் விஷயத்தில் இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேநேரம் ஆப்கனில் இருக்கும் இந்தியர்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழலில் தாலிபான்களைக் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளா இல்லையா
இது குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா கூறுகையில், "தாலிபான்கள் பயங்கரவாதிகளா இல்லையா? நீங்கள் (மத்திய அரசு) அவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் பயங்கரவாதக் குழுவாக இருந்தால் ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்? அப்படி பயங்கரவாதிகளா கருதவில்லை என்றால் ஐநா சபையில் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து அவர்களை நீக்க வேண்டும் என்பதை நீங்கள் வலியுறுத்துவீர்களா? சீக்கிரம் ஒரு முடிவை எடுங்கள்" என்று தெரிவித்தார்.
Recommended Video

இந்தியா பேச்சுவார்த்தை
முன்னதாக நேற்று முதல் முறையாக இந்தியா தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டுள்ளது. தாலிபான்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கத்தாருக்கான இந்தியத் தூதர் தூதர் தீபக் மிட்டல், தாலிபான்களின் அரசியல் அலுவலக பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை சந்தித்தார். இந்த சந்திப்பில் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானைப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவது குறித்து இந்தியா தனது கவலையை எழுப்பியது. அப்போது பயங்கரவாதிகளின் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஷேர் முகமது அப்பாஸ் உறுதியளித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாரூக் அப்துல்லா கருத்து
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது குறித்து உமர் அப்துல்லா தனது ட்விட்டரில், "அமெரிக்கப் படைகள் வெளிறியது தவறு என நான் சொல்ல மாட்டேன். ஆனால், வெளியேற இது முறையான ஒரு வழியில்லை" என்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல உமர் அப்துல்லா தந்தை பாரூக் அப்துல்லா, "காஷ்மீரில் பஞ்சாயத்துத் தலைவர்கள் போல அடிமட்ட தலைவர்கள் தான் பயங்கரவாதிகளின் முதல் இலக்கு. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் இங்கு இன்னும் பயங்கரவாத பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம். வரும் காலத்தில் என்ன தான் நடக்கும் எனக் கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications